இன்று நள்ளிரவு முதல் அமல் ஜம்மு காஷ்மீர், லடாக் இரு புதிய யூனியன் பிரதேசங்கள் உதயம்: மத்திய அரசின் நேரடி நிர்வாகம்

By Selvanayagam PFirst Published Oct 30, 2019, 8:56 PM IST
Highlights

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின், லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதில் புதுச்சேரியைப் போன்று, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், சண்டிகரைப் போல், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும். இரு யூனியன் பிரதேசங்களும் இனிமேல்  மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.

இதற்குமுன்பு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெளிமாநிலத்தவர் நிலம், வீடு வாங்க தடை இருந்தது. நாளை முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீங்குகிறது. மற்ற மாநிலத்தில் உள்ள மக்களும் ஜம்மு காஷ்மீர் அனைத்துவிதமான சொத்துக்களையும் வாங்க முடியும்

மாநிலம் ஒன்று யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவது இது முதன்முறையாகும். இந்த மூலம் நாட்டின் மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைகிறது. அதேசமயம் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு நீக்கி, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் ஆகிய பகுதிகளைப் பிரித்து இரு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ெதரிவித்திருந்தது.

இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை காஷ்மீர் மாநில நிர்வாகம் விதித்தது.

தொலைபேசி, செல்போன், இன்டர்நெட் சேவை, நாளேடுகள், ஊடகங்களுக்கு கட்டுப்பாடு போன்றவை கொண்டுவரப்பட்டதால் மக்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்தனர். அரசியல் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

இரு யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திர முர்முவும், லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூரும் துணை நிலை ஆளுநர்களாக நாளை காலை பொறுப்பேற்கவுள்ளனர். அவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

click me!