முதலமைச்சர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ கருணாஸ், புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திநகர் போலீஸ் துணை ஆணையர் அரவிந்தனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். மேலும் வன்முறையை தூண்டும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. மேலும் முதல்வரே நான் அடித்துவிடுவேன் என பயந்து 100 போலீஸாரை அழைத்து வருகிறார் என்றும் கூவத்தூரில் நான் இல்லாமல் அரசாங்கம் உருவாகியிருக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தான் காவல் துறையை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொண்டார். மேலும் இனி இது போல் பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஜாதிக்கலரவத்தை தூண்டும் வகையில் பேசுதல், கூட்டுசதி என எட்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கருணாசை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை6 6.30 மணியளவில் கருணாஸை போலீசார் கைது செய்தனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக் அழைத்து வரப்பட்ட அவரிடம், 3 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்ற நிதிபதி கோபிநாத் வீட்டில் கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அக்டோபர் 5 ஆம் தேதி வரை கருணாஸ் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கருணாஸ், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கருணாஸ் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, கருணாசுடன் கைது செய்யப்பட்ட செல்வநாயகம், கார்த்திக், நெடுமாறன் மற்றும் தாமோதிரக் கிருஷ்ணன் ஆகிய கட்சி நிர்வாகிகளும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட உள்ளனர்.