கூடாரத்தை காலி செய்த கருணாஸ் - கலைக்கப்பட்ட முக்குலத்தோர் புலிப்படை

First Published Mar 24, 2017, 11:10 AM IST
Highlights
karunas dismissed mukkulathor pulippadai admins


நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சி என்ற அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். இதைதொடர்ந்து அரசியலில் நுழைந்து, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்.

இதில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், சட்டமன்ற உறுப்பினராக திருவாடனை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், முக்குலத்தோர் புலிப்படையின், நிர்வாகிகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பில் உள்ள நிர்வாகிகள், தலைவர் கருணாசின் அனுமதியின்றி பல்வேறு செயல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து கருணாஸ் விசாரணை நடத்தினார்.

அதில், தனது அமைப்பின் பெயரை வைத்து மூத்த நிர்வாகிகள் பல்வேறு குளறுபடிகள் செய்ததும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதும் தெரியவந்தது.

இதையடுத்து கருணாஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மாநில, மாவட்ட, நகர, பகுதி, கிளை நிர்வாகிகள் அனைவரையும் முழுவதுமாக நீக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், புதிய நிர்வாகிகள் தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

தற்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டு 3 அணிகளாக செயல்படுகின்றனர். இதில், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தீபா என தனித்தனியாக பிரிந்துள்ளனர். மேலும், ஆர்கே நகர் தொகுதி இடை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதையொட்டி, முக்குலத்தோர் புலிப்படையினர், அதிமுகவின் 3 அணிகளிலும் சேர்ந்து செயல்படுவதாக தெரிகிறது. ஏற்கனவே கருணாஸ், அதிமுக கூட்டணியில் இருந்து பெரும் குழப்பத்தில் உள்ளார்.

‘கோல்டன் பே’ ரிசார்ட்டில் தங்கிய விவகாரம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இதில், தனது அமைப்பை சேர்ந்தவர்கள், தனது அனுமதியில்லாமல், அதிமுகவினருக்கு ஆதரவு கொடுத்ததால், இந்த முடிவு எடுத்துள்ளதாக, முக்குலத்தோர் புலிப்படை வட்டாரங்கள் கூறுகின்றன.

click me!