கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார்?  இன்று வாக்கு எண்ணிக்கை… உச்சக்கட்ட பரபரப்பில் காங்கிரஸ்..பாஜக…

First Published May 15, 2018, 6:03 AM IST
Highlights
karnataka election counting today who the in the field congress or bjp


கர்நாடகா சட்டப் பேரவைக்கு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள்  இன்று எண்ணப்படுகின்றன. இதில் கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணி அளவில் தெரியவரும். இதையடுத்து மாநிலம் முழுவதும் உச்சகட்ட பரபரபப்பு ஏற்பட்டுள்ளது

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.



வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்படும் அரங்கத்தில் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணிக்கு தெரிந்துவிடும்.

தேர்தல் முடிவுகளை அறிய கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த நாடே மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவு தான் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். இந்த தேர்தலில் பாஜக  வென்றால், அது பிரதமர் மோடியின் கரங்களை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும்.

ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காது எனவும், மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் தெரிவித்துள்ளன.

இதனால் கர்நாடகத்தில் 2004-ம் ஆண்டை போல் மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 3 கட்சிகளும் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.

சித்தராமையா ரகசிய உத்தரவின்பேரில் மாநில உளவுத்துறையும் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றும், காங்கிரஸ் அதிகபட்சமாக 95 முதல் 102 இடங்களில் வெற்றிபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா 70 இடங்களிலும், ஜனதாதளம்(எஸ்) 28 இடங்களிலும் வெற்றிபெறும். 30 தொகுதிகளில் 3 கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி உள்ளது, அதில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

click me!