தளி தொகுதியில் கலவரத்திற்கு திட்டம்போடுது கர்நாடக பாஜக.. அலறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன்..

By Ezhilarasan BabuFirst Published Apr 5, 2021, 2:34 PM IST
Highlights

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருப்பதாலும், தளி சட்டப்பேரவைத் தொகுதி கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் இருப்பதாலும், தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்த விதிமீறல்கள் செய்துவருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கடுமையாகக் கண்டிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் கர்நாடக பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலவர சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி  சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் நடைமுறை விதிகளுக்கு விரோதமான செயல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து பாரதிய ஜனதாவைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தளி தொகுதியில் தங்கி ஒரு கலவரச் சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள். 

கர்நாடக மாநில எல்லையையொட்டி உள்ள ஆனேகல் என்ற ஊரில் சாய் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் மல்லிகை பார்ம் ரிசார்ட்ஸ், சரவணா லாட்ஜ், அஞ்செட்டி மாரி பள்ளி கிராமத்தில் உள்ள ரிசாட் உள்ளிட்ட இடங்களில் இவர்களில் பலர் தங்கி இருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் தொகுதியில் பல இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. தேர்தல் நாள் அன்று பல வாக்குச்சாவடிகளில் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படியே தளி தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தேர்தல் பரப்புரையின் கடைசி நாளான 4-4-2021 மாலை 7 மணிக்கு மேல் தொகுதி வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் அப்பகுதியை விட்டு  வெளியேறிவிடவேண்டும்,  கர்நாடகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் இன்றும்தொடர்ச்சியாக அங்கு தங்கியிருப்பது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு விரோதமானதாகும். கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருப்பதாலும், தளி சட்டப்பேரவைத் தொகுதி கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் இருப்பதாலும், தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்த விதிமீறல்கள் செய்துவருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கடுமையாகக் கண்டிக்கிறது. 

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தலையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளுக்கு விரோதமாக தங்கி உள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அந்த தொகுதியில் வாக்காளராக இல்லாதவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற தக்க நடவடிக்கை எடுக்குமாறும், சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடப்பதை உறுதிப்படுத்துமாறும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!