இருவரும் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்ததால் கடந்த முறை நடந்த எம்.பி. தேர்தலின் போது அவர்களுடைய பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையானதில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சமில்லை. சசிகலாவால் அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் வெடிக்கும் என காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருக்க விரும்புவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் பின்னர் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கும் ஆன்மீக சுற்றுலா சென்று கொண்டிருக்கும் சசிகலா பற்றி இன்றுவரை அரசியல் வட்டாரங்கள் பேசாமல் இல்லை.
சமீபத்தில் வெளியான சில கருத்துக்கணிப்புகளில் கூட முதலமைச்சர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு கூட பலரும் சசிகலாவின் பெயரை சுட்டிக்காட்டியிருந்தனர். இந்நிலையில் ஆன்மீக பயணத்தில் உள்ள சசிகலா ஜனநாயக கடமையாற்றுவதற்காக சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஜெயலலிதா வீட்டில்தான் இவ்வளவு காலம் சசிகலாவும், அவருடைய உறவினர் இளவரசியும் வசித்து வந்தனர். அதனால் போயஸ் கார்டன் வீட்டு முகவரிப்படி கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் வாக்களித்தனர்.
ஆனால் இருவரும் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்ததால் கடந்த முறை நடந்த எம்.பி. தேர்தலின் போது அவர்களுடைய பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தற்போது தியாகராய நகரில் வசித்து வரும் சசிகலாவின் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலாவிற்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு அமமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.