இந்தி மொழி குறித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்துக்கு, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி கண்டனம் தெர்வித்துள்ளார்.
kanimozhi mp condemned Pawan Kalyan: மத்தியில் உள்ள பாஜக அரசு, புதிய தேசிய கல்விக்கொள்கை வாயிலாக தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்துள்ள நிலைப்பாடு, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க, ஜனசேனா கட்சியின் நிறுவன நாளான நேற்று, அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணின் பேச்சு, மேலும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தனது கட்சியின் 12 வது ஆண்டு விழாவில் பேசிய பவன் கல்யாண், மக்களவை தொகுதி, மறுசீரமைப்பு விவகாரம், மும்மொழி கொள்கை, ரூபாய் லட்சினை மாற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்
தெற்கின் யோகியாக மாறுகிறாரா பவன் கல்யாண்? பாஜகவின் வியூகம் பலிக்குமா?
இந்த நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண், "நாட்டின் ஒருமைபாட்டிற்கு தமிழ் உட்பட பல மொழிகள் தேவை. எனவே, இந்தி வேண்டாம் என்ற கூற்று தவறு. இந்தி வேண்டாம் என்று கூறுபவர்கள், நிதி ஆதாயத்திற்காக ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் பவண் கல்யாணின் பேச்சுக்கு, திமுக எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், "மொழித் தடைகளைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்க தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தன்னுடைய பதிவில், பாஜகவில் சேருவதற்கு முன்பு பவன் கல்யாண் இந்தி திணிப்பு குறித்து பேசிய பதிவுகளையும், தற்போது பேசியதையும் ஒப்பிட்டு படத்தை பகிர்ந்துள்ளார். அதில், பவன் கல்யாண் தனது பழைய பதிவில், “வட இந்திய அரசியல் தலைமை நமது நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும்” இந்திக்கு எதிராக கூறியிருந்தார்.
கனிமொழி எம்.பி.யின் இந்த பதிவுக்கு ஆதரவாக பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். கனிமொழியின் பதிவுக்கு பவன் கல்யாண் என்ன பதில் அளிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் படங்கள் டப்பிங்.. இந்தி எதிர்ப்பு.. தமிழக அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கிய பவன் கல்யாண்