
திமுக எம்பி கனிமொழி நேற்று மாலை விமானம் மூலம் திருச்சி புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக, இழிவாக பேசுவதை திமுகவில் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திமுக தலைவர் கருணாநிதியின் கொள்கை மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய மரியாதை, கவுரவம் அளிக்கவேண்டும் என்பதுதான்.
எனவே, ராதாரவி உண்மையில் மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் விதத்தில் பேசியிருந்தால் அவர் அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அறவே சரி இல்லை. எனவே சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு என்ன பதில் சொல்ல முடியும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்குதான் இல்லையே. இதைத்தான் திமுகவின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறு. இந்த திட்டம் பற்றி ஆய்வு நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அந்த ஆய்வு பணியின் போது கூட சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது, மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்துதான் அனுமதி அளிக்கப்பட்டது.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு திமுக ஒருபோதும் அனுமதி அளிக்கவில்லை. தற்போது வேண்டும் என்றே இதுபோல் தவறான பிரச்சாரத்தை செய்கின்றனர்.
இலங்கை மீனவர் பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது. தற்போது வேறு சில நாடுகளும் நம் மீனவர்களுக்கு தொல்லைகள் கொடுக்கின்றன. இந்த பிரச்னையை தீர்க்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் முழுமையாக திட்டமிட்டு செயல்படுத்தி தமிழக மீனவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு துரித நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.