தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி 10 நாட்களில் விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்நாத் உறுதி அளித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மை பெற 116 இடங்கள் தேவை என்ற நிலையில் அங்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஆட்சி அமைக்க 2 எம்எல்ஏ.,க்கள் குறைவாக இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தலா 1 எம்எல்ஏவைக் கொண்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் அறிவித்தது
இந்நிலையில் அம்மாநில முதலமைச்சரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சிக்குள் . இழுபறி நீடித்தது. முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு போபாலில் நடந்தது. இதில் மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, ஜோதிராதித்யா சிந்தியா, திக்விஜய்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் கமல்நாத் முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று காலை அவர் முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சி . டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 72 வயதான கமல்நாத் 9 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார்.
அவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி 10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.