கமல் ஹாசன்- உதயநிதி ரகசிய சந்திப்பு... திமுக கூட்டணியில் காங்கிரஸ்- கம்யூனிஸ்ட்களை கழற்றிவிடத் திட்டம்..?

By Thiraviaraj RMFirst Published Dec 16, 2020, 4:33 PM IST
Highlights


இந்நிலையில்தான், ரஜினியுடன் கூட்டணி என குட்டையை குழப்பி, திமுகவிடம் மீன் பிடிக்க நினைக்கிறார் கமல்ஹாசன் என்கிறார்கள். 

ஒவ்வொரு வாக்குகளும் முக்கியம் என்கிற நிலைமை தமிழகத்தில் உருவாகி உள்ளது. ஆகையால், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடு பிடித்து வரும் நிலையில், கட்சிகள் கூட்டணிகளை பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. ஆளுமைகளான ஜெயலலிதாவும், கருணாநிதியும் மறைந்த பிறகு நடக்கும் சட்டப்பேரவை தேர்தல் இது. இதனால், பிரதான கட்சிகளை தவிர, இது வரை இல்லாத அளவுக்கு புதிய கட்சிகளின் வருகை தற்போது அதிகரித்து வருகிறது. அதனால் பிரதான கட்சிகளின் கூட்டணி கணக்குகள் மாறியுள்ளன. மடைமாற்றப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், கமல் ஹாசன், ரஜினிகாந்த் வருகை, பா.ஜ.கவின் படுவேக பாய்ச்சல் அரசியல் வியூகம் போன்றவை தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில், தற்போதைய கூட்டணி கணக்கை மாற்றி போடும் முக்கியமான நிகழ்வு கடந்த வாரம் ரகசியமாக நடந்துள்ளது. மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசனை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மூன்று முறை சந்தித்து பேசியுள்ளார். ஒரு சந்திப்பு கமலுடன் நெருக்கமாக இருக்கும் விஜய் டிவியின் மஹேந்திரன் இல்லத்திலும் மற்ற சந்திப்புகள் ஒரு நட்சத்திர விடுதியிலும் நடந்துள்ளன.

இந்த சந்திப்பின் போது கமல் 40 சீட்டுகள் கேட்டதாகவும், உதய் 20-25 சீட்டுகள் கொடுக்க தயாராக உள்ளதாகவும் தகவல்கள் கசிய துவங்கியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமல் ஹாசன் அ.தி.மு.கவையும், பா.ஜ.கவையும்  சாடி வருதுவதே இதற்கு சான்று. தான் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், மற்ற கட்சிகள் விரக்தியாகும் என்பதால் தனது மகன் உதயநிதியை இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். 

கமல் ஹாசன் மூன்றாவது அணி அமைத்தால் தி.மு.கவின் வாக்குகள் சிதறும் என ஐ-பேக் நிறுவனம் கொடுத்த அறிவுரையின் அடிப்படையிலேயே தி.மு.க இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ்- இடதுசாரிகள் போன்ற கட்சிகளால் எந்த பலனும் இல்லை என ஐ-பேக் ரிப்போர்ட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸை கைவிட வேண்டும் என்று பா.ஜ.க- தி.மு.க தலைமையை வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், கமல்ஹாசனை கூட்டணியில் இணைப்பது மூலம், காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழற்றிவிடப் பார்க்கிறது தி.மு.க என்கிறார்கள். முரசொலி பவழ விவாவில் முக்கியத்துவம் கொடுத்தபோதே திமுகவுக்கும், கமலுக்கும் இருக்கும் தவிடுபொடியானது.

 

இந்நிலையில்தான், ரஜினியுடன் கூட்டணி என குட்டையை குழப்பி, திமுகவிடம் மீன் பிடிக்க நினைக்கிறார் கமல்ஹாசன் என்கிறார்கள். தனது பேச்சு, கவிதையை போலவே அரசியலிலும் குழப்ப நினைக்கிறார் கமல். அது எடுபடுமா? அல்லது பொடிபடுமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்..! 

click me!