
இதுவரை கமலின் ரசிகர்கள் அவரை ’உலக நாயகனாக’ பார்த்திருக்க, அவரின் சமீபகால அரசியல் சார்ந்த செயல்பாடுகளால் தமிழகம் அவரை ‘உய்விக்க வரும் நாயகன்’ என்று பார்க்க, மாநிலம் மற்றும் மத்தியில் ஆளும் அரசுகளோ அவரை ‘கலக நாயகன்’ ஆக பார்க்கிறார்கள்.
இந்நிலையில் இன்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கமலின் மேடைப்பேச்சு அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடித்தது போலிருந்தது. அவரது பேச்சின் ஹைலைட்ஸ் இதோ...
“நாட்டின் வளர்ச்சிக்கு ஹைட்ரோகார்பன் தேவை என்று நியாயப்படுத்துகின்றனர் அதிகார வர்க்கத்தினர். ஆனால் ஹைட்ரோகார்பனை சாப்பிடமுடியாது. ஹைட்ரோகார்பனுக்காக கழனியை அழித்தால் எதைத்தின்று உயிர்வாழும் என் மனித இனம்?
விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றிட தயார்.
விவசாயிகளை தனி தொழிலாளியாக தள்ளி வைத்துப் பார்த்துவிட முடியாது. இது ஒரு தொழிலில்லை வாழ்க்கை முறை. மழையையும், ஆறுகளையும் சாமியாக கும்பிடுங்கள். அதுவே என் வேண்டுகோள்.
தங்க சுரங்கங்கள் ஆயிரம் இருக்கலாம் ஆனால் நெல் விளையும் பூமியில்லாமல் என்ன பயன்? வைரத்தையும், தங்கத்தையும் பொடி செய்து சாப்பிட முடியாது.
தண்ணீரின் அவசியத்தையும், அத்தியாவசியத்தையும் என் மன்றத்து பிள்ளைகள் உணர்ந்திருக்கின்றனர். அதனால் என் நற்பணி இயக்கத்தினர் 5 லட்சம் பேர் ஏரி, குளங்களை சீரமைக்க உள்ளனர்.” என்று நீண்டது.
ஏரி, குளங்களை சீரமைக்க உள்ளோம் என்று கமல் கூறியிருப்பது தி.மு.க.வினரை துணுக்குற செய்துள்ளது. காரணம், தமிழகத்தில் அந்த சீரமைப்பு பணிக்கு வித்திட்டது ஸ்டாலின் தான். அதன் பிறகே அரசாங்கம் அதை கையிலெடுத்தது.
ஏற்கனவே சிறுபான்மை ஆதரவு, இந்துத்வ எதிர்ப்பு எனும் தி.மு.க.வின் நிலைப்பாட்டை கமல் காப்பி அடிப்பதாக அக்கட்சி கருவி வரும் நிலையில், தூர்வாரல் டெக்னிக்கையும் அவர் கையிலெடுப்பது தி.மு.க.வுக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.