
நான் பொறுக்கிதான்... அறிவு மொழி சார்ந்த பொறுக்கி என்று கூறினார் நடிகர் கமல்ஹாசன். முன்னர் பாஜக., தலைவர் சுப்பிரமணிய சுவாமி பொறுக்கி என்ற சொல்லை பயன்படுத்தினார். அதனை இப்போது நினைவு கூர்ந்து கூறியுள்ளார் கமல் ஹாசன்.
சென்னை, பசுமை வழிச் சாலையில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசிய போது, தில்லியில் ஒருவர் என்னை பொறுக்கி என்றார். ஆமாம், நான் பொறுக்கி தான். அறிவு மொழி சார்ந்த ஞானத்தை நான் எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன்; அதற்கு வெட்கப்பட மாட்டேன் என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்.
பின்னர், விவசாயிகளின் குரலுக்கு ஆதரவாகப் பேசிய கமலஹாசன், நான் உழவன் மகன் இல்லை என்றாலும், உழவனின் மருமகன். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தான் என்பதை நாம் மறந்து விட்டோம். ஜனநாயகத்தில் விவசாயிகள் தான் எஜமானர்கள். அதற்காக நான் இங்கு ஓட்டு சேகரிக்க வரவில்லை... சோறு சேகரிக்க வந்துள்ளேன். நான் விவசாயிகளுக்கு ஊக்கியாகவும், அலாரமாகவும் இருப்பேன். சினிமா இல்லாமல் வாழலாம், ஆனால் விவசாயம் இல்லாமல் வாழ முடியது. உணவு விவசாயத்தை தொழிலாக மாற்றினால் தான் நாம் வாழ முடியும்... என்று பேசினார் கமலஹாசன்.