எங்களுக்கு டெபாசிட் கிடைக்கிறதே கஷ்டம்தான்... பிட் நோட்டீஸ் அடிக்கிற செலவுக்கே கஷ்டப்படுறோம்...! மய்ய வேட்பாளர்கள் ஓப்பன் டாக்..!

By Vishnu PriyaFirst Published Apr 6, 2019, 2:54 PM IST
Highlights

தேர்தலை ஒட்டி, தமிழக அரசியலில் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள். அதில் ஒன்று, ‘கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு டெபாசிட் பணமாவது திரும்ப கிடைக்குமா?’ என்பதுதான்.

டைட்டிலில் சொன்ன அதே விஷயம்தான்! தேவர்மகன், மகாநதி படங்களில் கமல்ஹாசன் ‘ஹ்ஹாஆஆஆஆ...’ என்று முகத்தில் அடித்து அழுவதை நிச்சயம் கவனித்திருப்பீர்கள். ஒரு மகாநடிகனாக அந்த அழுகை சிலிர்க்க வைத்தது, ஆனால் ஒரு அரசியல் தலைவனாக அவரது இந்த அழுமை வருத்தப்பட வைக்கும் அதே நேரத்தில், தோல்வி தெரிந்தே களமிறங்கிய கமலின் பின்னணியில் யார்? எனும் கேள்வியும் எழுந்துள்ளது. 

தேர்தலை ஒட்டி, தமிழக அரசியலில் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள். அதில் ஒன்று, ‘கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு டெபாசிட் பணமாவது திரும்ப கிடைக்குமா?’ என்பதுதான். இந்தக் கேள்விக்கான பதிலை, அரசியல் விமர்சகர்கள், பார்வையாளர்களிடம் கேட்டால், அவர்கள் சுற்றி வளைத்து பதில் சொல்வார்கள். அதர்கு பதிலாக, நேரடியாக கமலின் வேட்பாளர்கள் சிலரிடமே கேட்டாலென்ன? என்று அவர்களிடமே கேட்கப்பட்டிருக்கிறது. 

”மாற்றம் தேவை எனும் எண்ணம் மக்களிடம் பகிரங்கமாக உள்ளது. எனவே சிவகங்கையில் நான் வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.” என்று தெம்பாக பேசி, டெபாசிட் பணத்தைப் பற்றிக் கமெண்டே சொல்லாமல் நழுவியிருக்கிறார் சிநேகன். ஆனால் கோயமுத்தூர் தொகுதி வேட்பாளரான மகேந்திரனோ...”எங்கள் கட்சியை மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் இது வாக்குகளாக எவ்வளவு சதவீதத்துக்கு மாறும் என்பதுதான் தெரியவில்லை. வெற்றி இலக்கு. ஆனால், டெபாசிட் பணம் பற்றி கவலைப்படவில்லை.” என்று மெதுவாக, ‘டெபாசிட் பணத்தை திரும்ப பெறுமளவுக்கு நாங்கள் ஓட்டு வாங்கப்போவதில்லை’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். 

ஆனால் பொள்ளாச்சி வேட்பாளரான மூகாம்பிகாவோ “வேலையெல்லாம் நல்லாதான் பாக்குறோமுங்க. கவுன்சிலர் தேர்தல் மாதிரி களமிறங்கி வேலை பார்க்கிறோம். ஆனால் வாக்குகள் எவ்வளவு கிடைக்குமுன்னு தெரியலை. நான் ரொம்ப குறைவாதான் செலவு பண்றேன். பிட் நோட்டீஸ் கொடுத்துதான் வாக்கு சேகரிக்கிறேன். அதுவே கஷ்டம்தான். நாங்க அரசியலுக்கு புதுசு. அதனால், டெபாசிட் பணம் திரும்ப கிடைக்குற அளவுக்கு வாக்குகள் கிடைக்குமான்னு உறுதியாக சொல்ல முடியாது.” என்று போட்டு உடைத்திருக்கிறார்.

click me!