
நடிகர்கள் கமல் மற்றும் அஜித் ஆகியோர் முதல்வராவதற்கு தகுதியானவர்கள் என சுசீந்திரன் தெரிவித்துள்ளார். அவர் எழுதியுள்ளதாக கடிதம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
ஜெயலலிதாவின் மரணம், வயது முதிர்வினால் திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு ஆகியவற்றால், தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பதோடு மக்களும் அவ்வாறாகவே கருதுகின்றனர்.
இந்நிலையில், அந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்ப கமல், ரஜினி ஆகியோர் முயற்சித்துவருகின்றனர். தீவிர அரசியலில் ரஜினி இறங்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது அரசியல் பிரவேசம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவரும் அரசியல் குறித்து வெளிப்படையாக எதுவும் பேசுவதில்லை. தற்போதைக்கு அரசியலில் ஈடுபடும் ஐடியா ரஜினிக்கு இல்லை என்றே தோன்றுகிறது.
ஆனால், கமலோ அமைச்சர்களின் மீதான குற்றச்சாட்டுகளைக் கடந்து, களத்தில் இறங்கி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துவிட்டார். அவரது பிறந்தநாளன்று, புதிய செயலி ஒன்றையும் ஹேஷ்டாக்குகளையும் அறிமுகம் செய்தார். கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடுவது உறுதி என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், சினிமா துறையிலிருந்து அடுத்து முதல்வராவதற்கு தகுதியானவர்கள் யார் என்ற கேள்விக்கு, இயக்குநர் சுசீந்திரனின் பதில் கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், கமலும் அஜித்தும் முதல்வராக தகுதியானவர்கள் என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் வைரலாக பரவிவருகிறது.