இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை போதுமானது என்றால் ஏப்ரல் மாதமே சசிகலாவிடம் தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியிருக்கலாம் என டிடிவி ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.
இதையடுத்து சசிகலா அணியும் ஒபிஎஸ் அணியும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்தனர். ஆனால் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை.
அப்போது, சசிகலா தரப்பில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் ஒபிஎஸ் க்கு 12 எம்.எல்.ஏக்களே ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து டிடிவியை ஒதுக்கிவிட்டு எடப்பாடி ஒபிஎஸ்சுடன் சேர்ந்து விட்டார்.
இந்நிலையில், அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகும் நிலையில் உள்ளது. அதாவது இரட்டை இலை சின்னமும் கட்சியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கே என தகவல் பரவியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் எடப்பாடி பன்னீர் தரப்பு மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
இதுகுறித்து டிடிவி தரப்பு ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை போதுமானது என்றால் ஏப்ரல் மாதமே சசிகலாவிடம் தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியிருக்கலாம் என தெரிவித்தார்.
பெரும்பான்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.