
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று டிடிவி தினகரன் தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்து வந்தனர்.
75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. சென்னை, எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விசாரணை கமிஷன் முன்பு டாக்டர்கள் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். இன்று தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தற்போது ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோ ஒன்று டிடிவி தினகரன் தரப்பு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஜெயலலிதா, பழச்சாறு அருந்தும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.