குஜராத்தில் 150–க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பாஜக தம்பட்டம் அடித்துக்கொண்ட நிலையில் 100 இடங்களில் கூட வெற்றி பெறுவது கடினமாகிப்போனதாக குறிப்பிட்டுள்ள சிவசேனா கட்சி, குஜராத் மாடல் என்பது தற்போது ஆட்டம் கண்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 99 தொகுதிகளை வென்று தொடர்ந்து 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சிக்கு கடும் சவால் அளித்த காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதீய பழங்குடியினர் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
பாஜக 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என நிர்ணயம் செய்து பணியாற்றியது, ஆனால் 100 தொகுதிகளை கூட எட்டமுடியவில்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்கள் செய்து வருகின்றன.
இப்போதைய நேரத்தில் ஒரு சமமான தீர்ப்பை வழங்கிய குஜராத் மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள் என திரிணாமல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தற்காலிகமான மற்றும் அவமானப்படாத வெற்றியாகும், இருப்பினும் பாரதீய ஜனதாவிற்கு இது தார்மீக ரீதியிலான தோல்விதான். பொதுமக்களுக்கு நேரிட்ட அட்டூழியங்கள், அதீத கவலை மற்றும் அநீதிக்கு எதிராக குஜராத் மக்கள் வாக்களித்து உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிவசேனா, குஜராத் தேர்தல் முடிவு எதேச்சதிகாரத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு எச்சரிக்கை மணி என்று விமர்சனம் செய்து உள்ளது.
இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ‘சாம்னா’ வில், குஜராத்தில் 150–க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பாஜக தம்பட்டம் அடித்தது. ஆனால் , 100 இடங்களில் வெற்றி பெறுவது கூட கடினமான இலக்கு என்பது நிரூபணம் ஆகிவிட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாடல் தற்போது ஆட்டங்ம கண்டுவிட்டதாகவும் சாம்னா தெரிவித்துள்ளது.
ராகுல்காந்தியும், ஹர்திக் பட்டேலும் குரங்குகள் என்று பாஜக தலைவர்கள் ஏளனம் செய்தார்கள். ஆனால் தற்போது, அந்த குரங்குகள் சிங்கத்தை அறைந்துவிட்டன என்று கிண்டலாக குறிப்பிடப்பட்டுள்ளது.