கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்
அதிமுகவில் தலைமை பதவியில் உள்ள ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகளையும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவிகளையும், தங்கள் வசம் வைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலரும், இரண்டுக்கும் மேற்பட்ட பதவிகளை வைத்து உள்ளனர். கட்சியில் பதவிக்காக பலரும் காத்திருக்க, முன்வரிசை தலைவர்கள், பல பதவிகளை கையில் வைத்துள்ளனர்.
இது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்திய நிலையில், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், 'கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். சைதை துரைசாமி, ஜெ.சி.டி.பிரபாகரன், பாலகங்கா போன்றோருக்கு முக்கிய பதவிகளை தாருங்கள்' என கொளுத்திப் போட்டுள்ளார்.
இதற்கு, கட்சியினரிடம் நல்ல வரவேற்பு. இதைத் தொடர்ந்து, பதவி இல்லாமல் தவிக்கும் 'மாஜி'க்கள், தங்களுக்கு பதவி வேண்டும் என, தலைமையை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.