
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் அப்போலோ வர உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் பற்றிய வதந்திகள் வேகமாக பரவியதை அடுத்து பொதுமக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் அனைவரும் அப்போலோ வர உத்தரவிடப்பட்டது.
முதல்வருக்கு அனைத்து சிகிச்சைகளும் முடிவடைந்த நிலையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து எழுந்துள்ள அசாதாரண நிலையை ஒட்டி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்து எம்.எல்.ஏக்களும் அப்போலோ வர அதிமுக தலைமை உத்தரவிட்டது.
முதல்வர் உடல்நிலையொட்டி எழுந்துள்ள பிரச்சனைகள், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு, அடுத்த கட்டமாக தமிழகத்தில் எழுந்துள்ள பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்த கூட்டம் நடந்தது.
இதையடுத்து, வெளியூரில் உள்ள எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் அவசர அவசரமாக சென்னை திரும்பி வந்தனர். அனைவரும் காலையிலிருந்தே அப்போலோவில் குவிந்தனர். எம்.எல்,ஏக்கள் அனைவரும் 11 மணிக்குள் வந்துவிட்டனர். இதையடுத்து அப்போலோவில் உள்ள தரைதளத்தில் கீழ் உள்ள தளத்தில் கூட்டம் துவங்கியது.
இந்த கூட்டத்தில் எம்.எல்,ஏக்கள் தவிர மாநிலங்களவை உறுப்பினர்கள் , அமைப்புச்செயலாளர்கள் , கட்சி நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முதல்வரின் உடல் நிலையும் அதையொட்டி எழும் அடுத்த கட்ட பிரச்சனைகளும் குறித்து விவாதிக்கப்பட்டது. அதிமுக என்ற அமைப்பின் கீழ் உறுதியாக பணியாற்றவும் எத்தகைய சூழ்நிலையிலும் தடம் பிறழாமல் உறுதியாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மேலும் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு அதன் முடிவுகளை ஒட்டி அனைவரின் கையொப்பம் மினிட்ஸ்சில் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. 1-30 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.