
முதலமைச்சர் ஜெயலலிதா, விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு வருவார் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா, பூரணமாக குணமடைய வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் பால்குடம் ஏந்துவது, அலகு குத்துவது, தேர்இழுப்பது உள்பட பல்வேறு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். இதேபோல், அப்பல்லோ மருத்துவமனை முன்பு தினமும் அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அ.தி.மு.க. மகளிரணி சார்பில் சஷ்டி பூஜை நடந்தது. அ.தி.மு.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், ராணி மேரி கல்லூரி கபடி வீராங்கனைகள் 13 பேர் அங்கு பிரார்த்தனை செய்தனர்.
இதை தொடர்ந்து நேற்று அப்பல்லோ மருத்துவமனை வெளியே அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பொன்னையன் நிருபர்களிடம் கூறியதாவது:–
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, மற்ற மருத்துவ நிபுணர்கள் குழுவும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அற்புதமான மருத்துவ சிகிச்சையை அளித்து கண்காணித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது பேசுகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும், மிகவும் பாராட்டத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா பிசியோதெரபி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் உடற்பயிற்சியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உடற்பயிற்சி முடிந்ததும் முதலமைச்சர் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு வருவார். அரசியல் பிரச்சனையிலும், ஆட்சி பிரச்சனைகளிலும் முழுநேரம் பங்கேற்கபார். முதலமைச்சர் ஜெயலலிதா நன்கு உடல்நலம் தேறிவருவதற்கு மக்கள் ஆண்டவனை தொழும் ஈடுபாடு, அவர்கள் செய்யும் பூஜை, அவர்கள் தரும் ஆசிர்வாதமும் தான் முக்கிய காரணம். அவர்கள் எல்லோருக்கும் அ.தி.மு.க. சார்பில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.