Jayakumar : பாஜக எவ்வளவு வேணா கேட்கலாம்.. ஏற்பதா இல்லையா என்பது எங்க முடிவு.. ஜெர்க் கொடுக்கும் ஜெயக்குமார்!

By Asianet TamilFirst Published Jan 29, 2022, 10:56 PM IST
Highlights

பாஜக வாய்ப்பு கேட்பது அவர்களின் கடமை. ஏற்றுக்கொள்ளுவது என்பது எங்களுடைய முடிவு. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், எங்களுக்கு என்று ஒரு முடிவு உள்ளதா இல்லையா?

இவர்களுக்கு (திமுக) ஒத்து ஊதினால் ஆளுநருக்கு புகழ் பாடுவார்கள். இவர்களுக்கு ஏற்றவாறு ஒத்து ஊதவில்லை என்றால் விமர்சனம் செய்வார்கள் என்று திமுகவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே அதிமுக தலைமையகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 4 மணி நேரம் வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. பாஜக செல்வாக்கான பகுதிகளில் மேயர், சேர்மன் பதவிகளை கேட்பதோடு, கணிசமாக வார்டு கவுன்சிலர் பதவிகளையும் கேட்பதால், முடிவு எட்டப்படவில்லை. எனவே, மீண்டும் கூடி பேச இரு கட்சித் தலைவர்களும் முடிவு செய்தனர். கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக வாய்ப்பு கேட்பது அவர்களின் கடமை. ஏற்றுக்கொள்ளுவது என்பது எங்களுடைய முடிவு. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம்.

ஆனால், எங்களுக்கு என்று ஒரு முடிவு உள்ளதா இல்லையா? எனவே கட்சி நலனை பொறுத்து முடிவு செய்வோம். அனைத்தையும் பார்த்துவிட்டு அதிமுக நலன் பாதிக்காத வகையில் முடிவு  இருக்கும். பொதுவாக தாய், தந்தையர் தெய்வத்துக்கு சமம். அதேபோன்றுதான் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒவ்வொருவரும் மரியாதை செலுத்தவேண்டியது அவசியம். இது உணர்விலேயே இருக்க வேண்டும். மரியாதை செய்யாத விஷயத்தை ரிசர்வ் வங்கி செய்திருப்பதை உண்மையிலே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்திருக்கிறது. தமிழ்த்தாயை அவமதிப்பது என்பது ஒரு தாயை அவமதிப்பது போன்றது. இந்த விஷயத்தில் இதுதான் அதிமுகவின் நிலை.

 திமுகவை பொறுத்தவரையில் ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடு எடுப்பார்கள். ஆட்சியில் இல்லாதபோது ஒன்று பேசுவார்கள். அதாவது. மாறி மாறி பேசும் இரட்டை நாக்கு உள்ள கட்சி. பச்சோந்திகள் எந்த இடத்துக்குச் செல்கிறதே இந்த இடத்துக்கு ஏற்றாற்போல் நிறத்தை மாற்றிக்கொள்ளும். அதுபோல ஆட்டுக்கு தாடி தேவையில்லை. நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்று சொன்னார்கள். பின்னர் ஆளுநரை சார்ந்துள்ளார்கள். இவர்களுக்கு ஏற்றவாறு ஒத்துவரவில்லை என்றால் ஆளுநரை விமர்சனம் செய்வார்கள். இவர்களுக்கு ஒத்துஊதினால் ஆளுநருக்கு புகழ் பாடுவார்கள். இவர்களுக்கு ஏற்றவாறு ஒத்து ஊதவில்லை என்றால் விமர்சனம் செய்வார்கள். எங்கள் கட்சியினரே முரசொலியைப் படிப்பதில்லை என கருணாநிதியே கூறியிருக்கிறார்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

click me!