
சசி அணியின் காதுக்குள் ஈயத்தை கொதிக்க கொதிக்க காய்ச்சி ஊற்றுவதைப் போலே பேசிப்பழகிவிட்டார் ஜெயக்குமார். இதனால் இந்த நாள் வரையில் அவருக்கு எந்த சறுக்கலும் நேர்ந்துவிடவில்லை.
ஆனால் பன்னீர் ‘தர்மயுத்தம் சீசன் 1’ நடத்தியபோது அவரையும், அவரது அணியையும் மிக கடுமையாக விமர்சித்ததற்காக ஜெயக்குமார் வகையாய் பழிவாங்கப்பட்டு இருக்கிறார். அதுதான் ஆர்.கே.நகரில் அவரது பரம வைரி மதுசூதனனுக்கு கிடைத்திருக்கும் சீட்!
ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மதுசூதனன் தங்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஜெயக்குமார் எதிர்பார்க்கவுமில்லை, அவரால் அதை ஜீரணித்துக் கொள்ளவும் முடியவில்லை.
இந்த நிமிடம் வரை கடப்பாறையை முழுங்கியது போல்தான் இந்த செய்தி அவரை அசெளகரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். ஜெயக்குமாரின் இந்த வருத்தத்தை பார்த்து, ‘கவலைய வுடுங்க தலீவரே! அந்தாளு தாராளமா போட்டி போடட்டும். ஆனா நாம வெச்சு செஞ்சிடுவோம்.
அவரு தோத்துப் போன சேதி உங்க காதுல வுழும்.’ என்று கொடுக்காத காசுக்கு ஓவராய் கூவினராம் அவரது ஆதரவாளர்கள். இதில் சட்டென டென்ஷனான ஜெயக்குமார், ‘வாய மூடுங்கடா! நம்ம கட்சி வேட்பாளர் தோத்தா, நம்ம ஆட்சியே தோற்ற மாதிரி.
இப்ப இருக்குற நெருக்கடியில இந்த மாதிரி எதுவும் நடந்துட கூடாது. இந்த விவகாரத்த எப்படி டீல் பண்ணணுமுன்னு எனக்கு தெரியும்.’ என்று அவர்களின் வாயை அடைத்துவிட்டாராம்.
இந்நிலையில், மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்து முடித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் செல்வதற்காக பிளைட் பிடிக்கும் முன், ஜெயக்குமாரிடமிருந்து அவருக்கு ஒரேயொரு வேண்டுகோள் மிக மிக உறுதியாக வைக்கப்பட்டுள்ளதாம்.
அது ‘உங்க ஆசைப்படி மதுசூதனன் ஜெயிக்கட்டும். ஆனா எந்த காலத்துலேயும் அவரை மினிஸ்டராக ஆக்கிடக்கூடாது.’ என்பதுதான். இதற்கு முதல்வர் மெளனமாக இருந்துவிட்டாராம்.
ஜெயக்குமார் கேட்ட இந்த வாக்குறுதி, மதுசூதனனின் கவனத்துக்குப் போக அடுத்த நொடியே அவர் இதை பன்னீரின் காதுகளுக்குப் போக! அவரோ சிரித்தபடி ‘இருக்கட்டும்ணே. அமைச்சர் பதவி கொடுக்கமாட்டாங்களோ, அப்ப நம்ம வாரியத்தலைவர் போட்டுக்கலாம்.’ என்று சிரிக்க, மதுசூதனனுக்கு ரெண்டு லட்டு கிடைத்த சந்தோஷமாம்.
ஆக மொத்தத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டியோ அதற்கு பிறகோ ஜெயக்குமார் தரப்பால் அ.தி.மு.க.வுக்குள் ஒரு பெரிய பிரளயம் கிளம்பலாம் என்கிறார்கள் விபரம் புரிந்தவர்கள்.