
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்கள் எழுந்ததால் அது பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் வருகிற 20 ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை கமிஷனுக்கு புகார் அனுப்பி உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுகவை சேர்ந்த சரவணன் வருகிற 22 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். அவருடைய மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பினார்கள்.
மீண்டும் இணைய வேண்டுமென்றால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அவருடைய கோரிக்கையை ஏற்றதை தொடர்ந்து இணைப்பு நடவடிக்கை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை நடத்தி 3 மாத காலத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை எழிலகத்தில் பசுமை தீர்ப்பாய அலுவலக வளாகத்தில் அவருக்கு தனி அறை வழங்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விவரம் தெரிந்தவர்கள் கமிஷனுக்கு சத்திய பிரமாணங்களை அனுப்புமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுமார் 50 சத்திய பிரமாணங்கள் கமிஷனுக்கு வந்துள்ளன.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுகவை சேர்ந்த சரவணன் விசாரணைக் கமிஷனுக்கு புகார் அனுப்பி உள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது அதிமுக வேட்பாளருக்கு சின்னம் வழங்குவதற்காக ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பாக சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.
வருகிற 20 ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெற உள்ளது. வருகிற 22 ஆம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு சரவணனுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.