முதல்வர் ஸ்டாலினை பார்த்து ஜெய் மாதாகி கோஷம்.. காண்டான சேகர் பாபு.. டரியலான பாஜக தொண்டர்கள்.

Published : Nov 10, 2021, 11:24 AM IST
முதல்வர் ஸ்டாலினை பார்த்து ஜெய் மாதாகி கோஷம்.. காண்டான சேகர் பாபு.. டரியலான பாஜக தொண்டர்கள்.

சுருக்கம்

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை முழுக்க வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது, இயல்பு வாழ்க்கை முடங்கி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை முழுக்க வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது, இயல்பு வாழ்க்கை முடங்கி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அவருடன் அமைச்சர் பெருமக்களும் நிவாரண பணிகளில் சுற்றிச் சுழன்று வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது சரியாக கால்வாய்கள் தூர்வாரப்படாததே இந்த வெள்ள பாதிப்புக்கு காரணம் என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறையாக செய்யப்படவில்லை என்றும், அதனால்தான் தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாத்திக்கு அதிகமாக உள்ளது என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிர்வாகிகளுடன் களத்தில் இறங்கி மழை வெள்ளத்தை ஆய்வு செய்து வருகிறார். 

பாஜகவினரும் பொதுமக்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் நிவாரண பணியில் ஈடுபட்டிருந்த பாஜக தொண்டர்களை அமைச்சர் சேகர்பாபு மிரட்டியதாக குற்றம்சாட்டி  பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அதற்கான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு வரும்போது, அப்பகுதியில் நின்றிருந்த சில பாஜகவினர் முதலமைச்சர் வாகனம் வருவதை கண்டு, பாரத் மாதா கி ஜே.. பாரத் மாதா கி ஜே.. என முழக்கமிடுகின்றனர். அப்போது வாகனத்தில் இருந்து அமைச்சர் சேகர்பாபு வேகமாக இறங்கி வருகிறார். அவர் வருவதைக் பார்த்தவுடன் பாஜகவினர் முழக்கமிடுவதை நிறுத்திவிடுகின்றனர், அப்போது அவர்களிடம் அமைச்சர் சேகர்பாபு என்ன வேண்டும் என்று கேட்கிறார், மனு கொடுக்க வந்தோம் என்று அவர்கள் கூறுகின்றனர், என்ன அரசியலா..?  என்று அவர் கேட்க, உடனே அவர்கள் ஐயோ அப்படி எல்லாம் இல்லை அண்ணா என்கின்றனர். பிறகு நாங்கள் முழக்கமிட்டால் நீங்கள் தாங்குவீர்கள்.? என்று பாருங்கள் என்று அவர் பதிலடி கொடுக்கிறார். இல்லை அண்ணா மனு கொடுக்கதான் வந்தோம் என்று அவர்கள் கூற, மனு கொடுக்க ஒருவர் மட்டும் வாருங்கள் என அவர் கூறிவிட்டு செல்கிறார். இதுதான் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

ஆனால் இந்த வீடியோவில் எந்த இடத்தில் அமைச்சர் சேகர்பாபு பாஜக தொண்டர்களை மிரட்டுவது போல இல்லை என்று திமுகவினர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதையெல்லாம் உத்தரபிரதேசம், அல்லது குஜராத்தில் வைத்துக்கு கொள்ளுங்கள் என்று அண்ணாமலையா தாக்கி வருகின்றனர்.இந்நிலையில், முன்னதாக கொளத்தூர் தொகுதியில் ஆய்வு செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அத்தொகுதி மக்களை சந்தித்து 2 முறை இந்த தொகுதியில் ஸ்டாலின்  சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார், ஆனாலும் இந்த தொகுதி குளம்போல காட்சியளிக்கிறது என கூறி விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்ல சென்னையை கோட்டையாக வைத்திருக்கிறோம் என்றுதான் திமுகவினர் சொன்னார்கள், ஆனால் சென்னை ஓட்டையாக அல்லவா இருக்கிறது என்று அவர் நக்கல் அடித்திருந்தார். அதேபோல் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் மழைநீர் நிவாரண பணியில் இறங்கியுள்ளனர். எனவே அதைப்பற்றி எந்த குறையும் சொல்வதற்கு இல்லை என அவர் கூறியிருந்தார். ஆனால் பாஜக தொண்டர்களை அமைச்சர் சேகர்பாபு மிரட்டினார் என்பது தொடர்பாக வெளியிட்டுள்ள இந்த வீடியோ திமுகவை வம்பிழுக்கும் செயல் என்றும் பாஜகவினரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

பாஜக இந்த அரசியலை எல்லாம் உத்தரப் பிரதேசத்திலும் அல்லது வேறு எந்த மாநிலத்திலாவது வைத்துக்கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் எடுபடாது என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செல்லுமிடங்களில் எல்லாம், பாரத் மாதா கி ஜே  என்றும், ஜெய்ஸ்ரீராம் என்றும் பாஜகவினர் முழக்கமிட்டு வருவது கடந்த சில மாதங்கலாள நடந்து வருகிறது இதுபோன்ற பாஜகவினரின் தொடர் இடையூறுகளால் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருந்தார் மம்தா, இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஆய்வுக்காக செல்லும் போது பாரத் மாதா கி ஜே என கோஷம் என்ன காரணத்துக்காக எழுப்பப்படுகிறது என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பாரத் மாதா கி ஜே என்றால் என்ன அது பாரத் மாதா வாழ்க என்று தானே அர்த்தம்  இதைச் சொல்வதால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று பாஜக தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். மொத்தத்தில் திமுகவை பாஜக டார்கெட் செய்துள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டெப்பாசிட் வாங்குவாரா? சுந்தர் சி-யை டம்மியாக்கிய PTR பழனிவேல் தியாகராஜன்!
Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!