Chennai Flood: ஸ்மார்ட் சிட்டி முறைகேடு.? பழிவாங்குறதை அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்வரை நக்கலடித்த பாஜக.!

By Asianet TamilFirst Published Nov 10, 2021, 9:35 AM IST
Highlights

"அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் என்ன ஆனது என்று தமிழக முதல்வர் கேட்டுள்ளார். அதற்குத் தனியாக லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து 'ரெய்டு' நடத்திக் கொள்ளலாம்."

ஸ்மார்ட் சிட்டி முறைகேடுக்காக லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து 'ரெய்டு' நடத்திக் கொள்ளலாம். உங்கள் பழிவாங்கும் நடவடிக்கையை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக பாஜக பொருளாளர் ஆர்.டி.சேகர் விமர்சித்துள்ளார்.

சென்னையில் கடந்த 6-ஆம் தேதி விடியவிடிய மழை பெய்தது. ஒரே நாள் இரவில் 23 செ.மீ. மழை பெய்ததால், சென்னை மாநகரமே வெள்ளக் காடானது. இந்த மழையில் இந்த முறை தியாகராயநகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. மழை பெய்து 2 நாட்களைக் கடந்தும் இந்தப் பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. இந்நிலையில், “தியாகராயநகர் பகுதிகளில் நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரிவர முடிக்கப்படவில்லை. இந்தத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. திட்டப் பணியில் கமிஷன் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்கப்படும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

முதல்வரின் இந்தக் கருத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அதன் கூட்டணி கட்சியான பாஜகவும் முதல்வருக்கு பதில் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜகவின் பொருளாளர் ஆர்.டி.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் என்ன ஆனது என்று தமிழக முதல்வர் கேட்டுள்ளார். அதற்குத் தனியாக லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து 'ரெய்டு' நடத்திக் கொள்ளலாம். உங்கள் பழிவாங்கும் நடவடிக்கையை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். இப்போது மக்களை மழை வெள்ளத்தில் இருந்து விரைந்து காப்பாற்றும் வழியை பாருங்கள்.

மழை வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே ‘வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறது’ என்று சொன்னீர்கள். மத்திய அரசின் பருவநிலை அறிவிப்பு துறையும் மூன்று மாதங்களுக்கு முன்பே எச்சரித்ததற்கு ஆதாரம் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் மூன்று நாட்களாக மக்கள் தத்தளிக்கின்றனர். ‘எந்த உதவி கேட்டாலும் தயார்’ என பிரதமர் மோடி உதவிக்கரம் நீட்டியுள்ளதைப் பயன்படுத்துங்கள். தமிழக அரசோடு ஒத்துழைக்க பாஜக தயாராக இருக்கிறது” என்று சேகர் தெரிவித்துள்ளார். 

click me!