Jai bhim:அந்தோணி சாமின்னா கலவரம் வரும்.. அக்னி சட்டின்னா வராதா..?? கொஞ்சம் கூட அடங்காத வ.கௌதமன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 22, 2021, 5:33 PM IST
Highlights

அவர்களே, சூர்யா அவர்களே உங்களை தூண்டிவிடும் அறிவுசார்ந்த ஒரு கூட்டம் இருக்கிறது. நான் ஒற்றை ஆளாக வருகிறேன், வாதத்தையும், விவாதத்தையும் தொடங்குவோம், இறுதியில் நான் தோற்றால் உங்கள் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்.

அந்தோணிசாமி என்றால் கலவரம் வரும், அக்னிசட்டி என்றால் கலவரம் வராதா? என இயக்குனர் வ.கௌதமன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் தமிழ் குடிகள் மத்தியில் மிகப்பெரிய கலவரம் ஏற்படுவதற்கு முன்னர் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும், இல்லையென்றால் நடக்கிற அத்தனை பிரச்சினைகளுக்கும், கலவரத்திற்கும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலரும் சூர்யாவுக்கும்- பாமகவுக்கும் ஆதரவாக மாறிமாறி குரல்கள் கொடுத்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி,  திராவிட இயக்கங்கள் சூர்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பாமகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என பாமக தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் ஆரம்பம் முதலிருந்தே குரல் கொடுத்து வரும் வ.கௌதமன், தமிழ் குடிகளுக்கு இடையே சாதி மோதலை ஏற்படுத்தும் நோக்கில் ஜெய்பீம் படத்தில் திட்டமிட்டு வன்னியர்கள் அடையாள முத்திரை வைக்கப்பட்டுள்ளது என்றும், நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை எனில் அவரை யார் விட்டாலும் நான் விட மாட்டேன் என்றும், எவனாக இருந்தாலும் எமனாக இருத்தாலும் வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். 

இந்நிலையில் மீண்டும் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தில் மிகப்பெரிய கலவரம் வெடிப்பதற்குள் தமிழக அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து அவர் பேசியதாவது, ஜெய் பீம் விவகாரத்தில் சூர்யா செய்தது தவறு என்பதை நேரடியாக ஒப்புக் கொள்ள வேண்டும், தவறு செய்தவன் எவனாக இருந்தாலும் பொதுவெளியில் அவன் மன்னிப்பு கேட்க வேண்டும், அதுதான் அறம், அதுதான் நீதி, அதுதான் நேர்மை. இயக்குனர் ஞானவேல் அவர்களே, சூர்யா அவர்களே உங்களை தூண்டிவிடும் அறிவுசார்ந்த ஒரு கூட்டம் இருக்கிறது. நான் ஒற்றை ஆளாக வருகிறேன், வாதத்தையும், விவாதத்தையும் தொடங்குவோம், இறுதியில் நான் தோற்றால் உங்கள் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். இல்லையென்றால், நீங்கள் தோற்றால் என்ன செய்வது என்று நீங்களே முடிவு செய்யுங்கள். இந்த திருட்டு திராவிட கூட்டமும், நாங்கள் எல்லோரும் மதிக்கிற அண்ணல் அம்பேத்கர் அய்யாவின் பெயரை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் ஒரு சில புல்லுருவிகள் கூட்டமும் இந்த பிரச்சனையை ஊதி பெரிதாக்குகிறது. இந்த மண்ணின் பூர்வகுடிகள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்று  நினைக்கிற  தீயசக்திகளும் சூர்யா அவர்கள் பின்னாலும், ஞானவேல் அவர்களின் பின்னணியிலும் உள்ளது. அந்தோணி சாமி என்ற மாற்று சமூகத்தவருக்கு குரு என  பெயர் வைத்திருக்கிறீர்களே இது என்ன நியாயம். வன்னிய சமூகத்தை தீயவர்களாக காட்டவேண்டும் என்பதை தவிற வேறு என்ன நோக்கமாக இருக்க முடியும். அந்தோணி சாமி என்றால் கலவரம் வரும், அக்னி சட்டி என்றால் கலவரம் வராதா.? 

கலைப்படைப்புகளை ரசிக்கிற முதலமைச்சர் என்பது மரியாதைக்குரியது. அவர்கள் அவர்களுடைய  பணிகளில் சரியாக இருக்கவேண்டும், ஆனால் இவ்வளவு பெரிய கலவரம் வெடித்த பிறகும் காவல்துறையும், அரசு இயந்திரமும், ஆட்சியாளர்களும் அமைதியாக இருப்பது என்பது சரிதானா? சில கும்பலால் சூர்யா பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார். இன்னும் எவ்வளவோ எனக்கு சொல்லத் தோன்றுகிறது, ஆனால் வார்த்தைகளை நான் உதிர்க்க விரும்பவில்லை, ஏனெனில் இந்த மண்ணில் நான் நேசிக்கிற தமிழ் குடிகள் ஒற்றுமையாக அமைதியாக வாழவேண்டும் என்பதுதான் அதற்கு காரணம். என் மண்ணுக்கும், இணத்திற்கும் சம்பந்தமில்லாத கூட்டம் இந்த மண்ணை அபகரிக்க முயற்சி செய்கிறது. இப்போது ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறது. ஞானவேல் அவர்களே நீங்கள் எங்கு பதுங்கி இருக்கிறீர்கள், யாருக்கு பின்னால் மறைந்து இருக்கிறீர்கள், சூர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறீர்களே அப்படி எனில் ஏன் சூர்யா அறிக்கை வெளியிட்டார். இவ்வாறு என பேசியுள்ளார். 
 

click me!