இளவரசி மகன் விவேக்கை நெருங்கும் வருமான வரித்துறை: ஜாஸ் சினிமாவுக்கு ரூ.1000 கோடி எப்படி வந்தது?

First Published May 1, 2017, 12:05 PM IST
Highlights
IT targets vivek jayaraman about jazz cinemas


சசிகலா, தினகரனை தொடர்ந்து, இளவரசி மகன் விவேக்கை நோக்கி, வருமான வரி துறையினர் தங்களது விசாரணை கோணத்தை திருப்பி உள்ளனர்.

ஜாஸ் சினிமா நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் முதலீடு வந்தது எப்படி? என்றும், முப்பது வயது கூட இல்லாத விவேக், அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பது எப்படி? என்று வருமான வரி துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா உள்ளிட்ட அனைத்து உறவுகளும், 2011 ம் ஆண்டு ஜெயலலிதாவால் நீக்கப்பட்டாலும், இளவரசி மற்றும் அவரது மகன் விவேக் மட்டும், போயஸ் தோட்டத்திலேயே வசித்து வந்தனர்.

மேலும், கடந்த 8 வருடமாக அவர் அதிமுகவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தினகரனுக்கும், சசிகலாவுக்கும் நெருக்கமான அவர், தமது சித்தப்பா திவாகரனுக்கும், அவரது மகன் ஜெய் ஆனந்துக்கும் எதிராகவே இருந்து வருகிறார்.

இதன் காரணமாகவே, விவேக்கும், ஜெய் ஆனந்தும் முகநூலில் மோதிக்கொண்ட தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், கட்சியிலும், ஆட்சியிலும் தங்கள் குடும்ப ஆதிக்கம் தகர்ந்து விடக்கூடாது என்பதற்காக, தினகரனுக்கு பதில் விவேக்கை அதிமுக துணை பொது செயலாளர் ஆக்க சசிகலா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், கட்சி மற்றும் ஆட்சியில் மறைமுக அதிகாரத்துடன் வலம் வரும், விவேக்கையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும், பன்னீர் வலுவான கோரிக்கையை முன் வைத்தார்.

ஆனாலும், எடப்பாடி தரப்பில் இருந்து விவேக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், 1000 கோடி ரூபாய் முதலீட்டுக்கு மேல் உள்ள ஜாஸ் சினிமாஸ், ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளேடு ஆகிய அனைத்தும், விவேக்கின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

எனவே, ஜாஸ் சினிமா நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் பெறப்பட்டது எப்படி?, மலைக்க வைக்கும், டெல்லி உள்ளிட்ட வெளிமாநில அரசியல் தொடர்புகள் விவேக்கிற்கு கிடைத்தது எப்படி? என்பது குறித்த விவரங்களை வருமான வரி துறையினர் ஏற்கனவே திரட்ட ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது ஒரு புறம் இருக்க, விவேக்கிடம் வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டால், தங்களிடம் உள்ள பல கோடிரூபாய் மதிப்புள்ள  சொத்துக்களை இழக்க வேண்டி வரும் என்று, திவாகரன் உள்ளிட்ட சசிகலா உறவுகள் அனைத்தும் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

click me!