அக்னிபாத்தை எதிர்த்து போராடுவதும் இந்துக்கள்தான், நீங்க இந்துக்களுக்கு ஓனர் இல்ல .. பாஜகவை பங்கம் செய்த திருமா

By Ezhilarasan BabuFirst Published Jun 18, 2022, 10:29 AM IST
Highlights

வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கும் நாசகாரத் திட்டமே அக்கிபாதி திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

வேலைவாய்ப்பில்லா இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கும் நாசகாரத் திட்டமே அக்கிபாதி திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். இளைய தலைமுறையினரின்கனவைச் சிதைக்கும் இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

வேலைவாய்ப்பின்றி அல்லாடும் கோடி கணக்கான இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் ’அக்னிபாத்’ என்னும் திட்டத்தை மோடி அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.குறிப்பாக, நான்காண்டுகளுக்காக மட்டுமே என படைக்கு ஆளெடுத்து அவர்களை அக்னிவீரர்களென பயிற்சியளித்துப் பிறகு வீட்டுக்கு அனுப்புவது என்கிற இத்திட்டம், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வாழும் பல கோடி இளைஞர்களின் கனவைச் சிதைப்பதாகவுள்ளது.

எனவே இந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம். வேலை வாய்ப்பின்மையால் விரக்தியடைந்த இளைஞர்கள் வெடித்தெழும் தீயாய் வெகுண்டெழுந்து போராடி வரும் இன்றைய சூழலில், ஏற்கனவே தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை உடனே அறிவித்திட மோடி அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

பொதுத் தேர்தல் நெருங்கிவரும் இந்நேரத்தில், வேலை இல்லாத் திண்டாட்டத்தால்இளைஞர்களிடையே ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பை புரிந்துகொண்டே, இந்திய ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் எனத் தெரிகிறது. 17 வயதைத் தாண்டியவர்கள் இராணுவத்தில் சேரலாம்; ஆனால், அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே வேலை தரப்படும்; பின்னர் 21 வயதில் அவர்கள் இராணுவ சேவையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதுதான் மோடி அரசு அறிவித்திருக்கிற திட்டம். இதனால் இளைஞர்கள் பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பை இழப்பார்கள்.

எந்தத் திறனும் இல்லாதவர்கள் ஆக்கப்படுவதால் அதன் பிறகு அவர்களுக்கு எந்த வேலையும் கிடைக்காது. ஆயுள் முழுவதும் வேலைவாய்ப்புக்குத் தகுதியற்றவர்களாக, கல்வித் தகுதி இல்லாதவர்களாக அவர்கள் ஆக்கப்படுவார்கள். இந்த சதியை உணர்ந்து தான் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார்,ராஜஸ்தான் முதலான வட மாநிலங்களில் இளைஞர்கள் வெகுண்டெழுந்து தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் ஆவேசத்தில் ஏராளமான இரயில்கள் தீக்கிரையாகி வருகின்றன. 

சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டுவருகிறோம் என்னும் பெயரில் பாஜக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இப்போது தென் மாநிலங்களுக்கும்இந்த ஆவேச அறப்போர் நீதி கேட்கும் நெருப்பாகப் பற்றிப் பரவுகிறது. ’இந்துக்களுக்கு நாங்கள் மட்டுமே ஆயுள்கால குத்தகைப் பாதுகாவலர்கள்’என்று பறைசாற்றிக் கொள்ளும் சங்பரிவார்கள், அதே இந்துக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சிபீடத்தில் அமர்ந்து கொண்டு, தற்போது தமக்கு வேண்டியஒருசில கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் தாரை வார்க்கும் தரகு வேலையை மோடி அரசு செய்து வருகிறது.

இந்நிலையில், இந்துக்களின் பாதுகாவலரான மோடி அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் யார்? அவர்கள் சொல்லும் அதே ‘சாட்சாத் இந்துச் சமூகத்தைச்’ சார்ந்த இளைஞர்கள் தான் என்பதை யாரும் மறுத்துவிட இயலாது. அக்னிபாத் என்னும் இந்து விரோத- வெகுமக்கள் விரோத ஆளெடுப்புத்திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், பிற மாநிலங்களிலும் இந்தக் கிளர்ச்சி மாபெரும் புரட்சியாக வெடிப்பதை எவராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!