பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஓ.எம்.ஆர். சாலையிலுள்ள 4 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டதை தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள் 24 சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் ஒழிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஏற்கெனவே எரிவாயு விலை உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது என்ற மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் விலை வாசி உயர்வு ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பதிவில், ‘’பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் உள்ள 24 சுங்கச் சாவடிகளில் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கொரோனா பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், அவர்கள் தலையில் அடுத்தடுத்த சுமையை ஏற்றுவது வேதனைக்குரியது. உடனடியாக சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.