பரபரத்த சட்டப்பேரவை..! தர்ணா செய்து கெத்து காட்டிய ஓபிஎஸ்..! எங்கே போனார் எடப்பாடியார்?

By Selva KathirFirst Published Sep 1, 2021, 11:06 AM IST
Highlights

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரவை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவிலும் இறங்கினர். இதற்கு காரணம் கொடநாடு கொலை வழக்கு.

விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கலைக்கும் வகையிலான திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஓபிஎஸ் சாலையில் இறங்கி போராடிய நிலையில் எடப்பாடியார் எங்கு போனார் என்கிற கேள்வி எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரவை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவிலும் இறங்கினர். இதற்கு காரணம் கொடநாடு கொலை வழக்கு. அந்த வழக்கில் தன்னை சிக்க வைக்க சதி நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி பதறிப்போய் பேட்டிகள் எல்லாம் கொடுத்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் தலைமையில் நேற்று அதே பாணியில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா செய்தனர்.

பிறகு யாரும் எதிர்பாராத வகையில் கலைவாணர் அரங்கத்திற்கு எதிரே உள்ள சாலையில் ஓபிஎஸ் மற்றும் எம்எல்ஏக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 20 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு வேறு வழியே இல்லாமல் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து திருமண மண்டபம் ஒன்றில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர். இந்த சூழலில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் இறங்கினர்.

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சாலையில் அமர்ந்து போராடினார். இதே போல் சேலத்தில் கூட போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை மட்டும் எங்கும் பார்க்க முடியவில்லை. சட்டப்பேரவைக்கு அவர் வராத நிலையில், சேலத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இதே போல் கடந்த வாரம் சட்டப்பேரவையில் வேளாண்மை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தின் போதும் எடப்பாடியார் அவைக்கு வரவில்லை.

அதாவது சட்டப்பேரவையில் இரண்டு முக்கியமான நிகழ்வுகளின் போதும் எடப்பாடியார் மிஸ்ஸாகி இருந்தார். இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி இந்த இரண்டு விஷயங்களையும் விட வேறு ஒரு முக்கிய விஷயத்தில் எடப்பாடியார் கவனம் செலுத்தி வருவது தான் என்கிறார்கள். அதாவது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு எனும் கண்டத்தை முதலில் முடிக்க வேண்டும் என்பதில் எடப்பாடியார் உறுதியாக உள்ளார். இதற்காக இரவு பகலாக அவர் அதிமுக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதோடு தன் மீது வழக்கு பதிவானால் தனக்காக வாதாட இந்திய அளவில் சிறப்பு வாய்ந்த கிரிமினல் லாயர்கள் சிலருடன் எடப்பாடி தரப்பு பேசி வருவதாக சொல்கிறார்கள். எனவே இந்த கொடநாடு கண்டம் அவரை விட்டு போனால் தான் அரசியலில் மறுபடியும் அவரை ஆக்டிவாக பார்கக் முடியும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

click me!