கொரோனா ஆபரேஷனில் களமிறங்கிய அமித்ஷா..!! அதை மட்டும் செய்ய வேண்டாம் என டாக்டர்களிடம் கேட்டுகொண்டார்.

By Ezhilarasan BabuFirst Published Apr 22, 2020, 2:32 PM IST
Highlights

மருத்துவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில்  அரசு உறுதியுடன் இருக்கிறது , மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும்  அரசு எடுக்கும்,

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும்  உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார் .  தேசிய அளவில் மருத்துவர்கள் இன்று அழைப்பு விடுத்துள்ள அடையாள மெழுகுவர்த்தி போராட்டத்தையும்  கைவிட வேண்டும் என்றும் அவர் மருத்துவர்களிடம் வலியுறுத்தியுள்ளார் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இந்நிலையில்  உலக அளவில் சுமார் 20.56 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதுவரை 1 லட்சத்து  77 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்தியாவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 20 ,178 ஆக உயர்ந்துள்ளது

 நாடு முழுவதும் சுமார் 648 பேர் உயிரிழந்துள்ளனர் .  இது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது , ஏன் எனில்  கடந்த ஒரு சில வாரங்களில் இந்தியாவில் நோய் தொற்றுக்கு ஆட்படுபவர்களின் எண்ணிக்கை பன் மடங்காக உயர்ந்திருப்பதே அதற்கு காரணம். இந்நிலையில்  கரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்னணியில் நின்று உயிரை பணயம் வைத்து போராடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவச உடைகள் இல்லாததனால் அவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது .  இதுமட்டுமின்றி கொரோனா வைரஸ்  எதிர்ப்புப் போரில் ஈடுபட்டிருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன

இந்நிலையில் தங்களுக்கு எதிரான தாக்குதலை கண்டிக்கும் வகையிலும்,  தங்களது பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்திய டாக்டர்கள் சங்கம் நாடுதழுவிய அளவில் " ஒயிட் அலர்ட் "  என்ற அடையாள போராட்டத்திற்கு என்று அழைப்பு விடுத்துள்ளது .  அதன்படி இன்று இரவு ஒன்பது மணிக்கு சக மருத்துவர்களுக்கு அதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மெழுகுவர்த்தியேந்தி ஆதரவு தெரிவிப்ப வேண்டும்  என அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது . இந்நிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மருத்துவ சங்கத்தினருடன் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா , மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர்  உரையாற்றினர். 

அப்போது , கொரோனா எதிர்ப்பு போரில் மருத்துவர்கள் மிக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் ,  நாட்டு மக்களின் சார்பாகவும் மத்திய அரசின் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்த அமித்ஷா , மருத்துவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில்  அரசு உறுதியுடன் இருக்கிறது , மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் ,  மருத்துவர்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.  அதே நேரத்தில்  இன்று நடைபெற உள்ள மெழுகுவர்த்தி அடையாளப் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அவர் மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார் . 

click me!