உலகத்துக்கு நிரூபித்துக்காட்டிய இந்தியா.. பிரதமர் மோடி தலைமைன்னா சும்மாவா.? கொண்டாடி மகிழும் அமித்ஷா.!

By Asianet TamilFirst Published Jan 16, 2022, 9:53 PM IST
Highlights

எந்த ஒரு சவாலையும் கடந்து வர முடியும். அந்த முன்னுதாரணத்தை இந்தியா உலக நாடுகளுக்கு காட்டியுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் உள் துறை அமைச்சர் அமித்ஷா..

பிரதமர் மோடியின் திறமையான தலைமைத்துவமும்  உறுதிப்பாடுடன் கூடிய தொடர் முயற்சிகளாலும் இந்தியா உலகுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பரவிய தொடங்கிய உடனே, அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா இறங்கியது. விரைவாக தடுப்பூசியைக் கண்டுபிடித்து ஓராண்டுக்குள் கோவேக்சின், கோவிஷீல்ட் என இரு தடுப்பூசிகளை இந்தியா உருவாக்கியது. அந்தத் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. தடுப்பூசி திட்டம் தொடங்கி இன்றோடு ஓராண்டு நிறைவடைந்தது. இன்றைய தேதி வரை 156.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளன. 

137 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதற்கும், அதில் ஈடுபட்டுள்ளோருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பாராடு தெரிவித்தனர்.  இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கொரோனா தடுப்பூசி பணிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இப்பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி. அரசின் தடுப்பூசி திட்டம் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது. உயிர்களைக் காப்பாற்றவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வழிவகுத்துள்ளது” என்று மோடி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைவரையும் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அமித்ஷா கூறுகையில், “பிரதமர் மோடியின் திறமையான தலைமைத்துவமும்  உறுதிப்பாடுடன் கூடிய தொடர் முயற்சிகளாலும் இந்தியா உலகுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசும் குடிமக்களும் நாட்டு நலன் கருதி  ஒருங்கிணைந்து  இலக்கை நோக்கி செயல்பட்டால், எந்த ஒரு சவாலையும் கடந்து வர முடியும். அந்த முன்னுதாரணத்தை இந்தியா உலக நாடுகளுக்கு காட்டியுள்ளது. சுகாதாரத்துறை பணியாளர்கள், விஞ்ஞானிகள், கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும் வாழ்த்துக்கள்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 

click me!