
வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விளக்கமளிக்க நேரில் ஆஜராகுமாறு சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 9-ம் தேதி 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சோதனை முடிந்துவிட்டது.
5-வது நாளாக இன்று, விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோரின் வீடுகள், மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட சில இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதுவரை நடந்த சோதனைகளில் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் போலி நிறுவனங்கள் நடத்தியதற்கான ஆவணங்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமான வரி சோதனை நடத்தி முடிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி, சசிகலாவின் அண்ணன் மருமகன் மருத்துவர் சிவக்குமார், இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அவரைத்தொடர்ந்து கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.
சசிகலாவின் குடும்பத்தை டார்கெட் செய்து வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. எனினும் சசிகலாவின் தம்பி திவாகரன், இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரை மையப்பத்தியே தீவிரமான சோதனை நடத்தப்பட்டது.
அந்த வகையில், சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள திவாகரனின் வீடு, மன்னார்குடியில் உள்ள அவரது வீடு, சுந்தரக் கோட்டையில் உள்ள அவரது கல்லூரி ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளன.
இந்நிலையில், சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக சென்னை வருமான வரித்துறை அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் திவாகரன் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
மன்னார்குடி வீடு, சுந்தரக்கோட்டையில் உள்ள கல்லூரி ஆகியவற்றிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த திருச்சி வருமான வரி அலுவலகம் சார்பில் சம்மன் அனுப்பப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.