டாஸ்மாக்கின் கள்ள சந்தைகளால் தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் கிராமத்தில் பெரம்பலூர் பாமக மாவட்ட செயலாளர் உலக. சாமிதுரை இல்ல திறப்பு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் “ தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளனர். இது குறைந்த விற்பனையாகும் கடையா அல்லது அதிக விற்பனையாகும் கடையா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் மது விற்பனை நடைபெறவில்லை மது திணிப்பு நடைபெற்று வருகிறது.
உணர்வுள்ள முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பாரானால் தமிழக இளைஞர்களை காப்பாற்ற முன்வர வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கே பாமக நிலைப்பாடாகும். டாஸ்மாக்கின் கள்ள சந்தைகளால் தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது மிகப்பெரிய கொள்ளை ஊழல் ஆகும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த ஊழல் குறித்து உண்மை வெளிவரும். நல்ல சமூக உணர்வுள்ள அமைச்சரை மது விலக்கு துறைக்கு அமைச்சராக நியமனம் செய்ய வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். எனவும் எங்களின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் வணிக பயன்பாட்டிற்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். மேலும் “ கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தான் 53 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் இவ்வகையான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மக்களை வெகுவாக பாதிக்கும், இது கண்டுக்கத்தக்கது மின்கட்டணம் உயர்வை வாபஸ் பெற வேண்டும் என கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா பாஜகவுடன் போட்டியா திமுக உடன் போட்டியா எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெறுமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதா.? முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு தகவல்