
உத்தரப்பிரதேசத்தில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
தீவிர பிரசாரம்
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இவற்றில் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவுகள் நிறைவு பெற்று விட்டன.
இதையொட்டி பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜகவை பொருத்தவரை பெரும்பாலான மத்திய அமைச்சர்கள் பிரசாரக் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட பேரணியை தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நடத்தியுள்ளார். வாக்கு சேகரிப்பு பணியில் பாஜக மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் பிரமாண் பேரணி நடத்தி வாக்கு சேகரித்தனர்.
முஸ்லிம் வாக்காளர்களை குறிவைத்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பிரசாரம் மேற்கொண்டார்.
40 தொகுதிகள்
மாநிலத்தில் உள்ள காசிப்பூர், வாரணாசி, ஜான்பூர், சந்தவுலி, மிர்சாப்பூர், பாடோய் மற்றும் சோனபத்ரா ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
இவற்றில் சோனபத்ரா, மிர்சாப்பூர், சந்தவுலி ஆகிய 3 மாவட்டங்கள் நக்சல் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1.41 கோடி பேர்
தேர்தல் நடைபெறும் 40 தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் 64.76 லட்சம்பேர் உள்பட மொத்தம் 1.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 535 வேட்பாளர்கள் இந்த 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இவை அனைத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணியில் சமாஜ்வாதி 31 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
2012 தேர்தலில்...
வாக்குப்பதிவை முன்னிட்டு 14 ஆயிரத்து 458 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2012-ல் இந்த 40 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றபோது, சமாஜ்வாதி கட்சி 23 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
நாளை மறுதினம் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வரும் 11-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.