
எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் காவல் துறை விசாரணை சரியாக இருப்பதுபோல் தெரியவில்லை என்றும், சாதாரண மனிதர்கள் மீதான வழக்குகளிலும் இப்படித்தான் விசாரணை நடைபெறகிறதா? எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பிரஸ் மீட்டின்போது பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆளுநரும் அந்த செய்தியாளரிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோரினார். தொடர்ச்சியான இந்த சர்ச்சைகளை அடுத்து ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழ ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் மற்றும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் நிருபர்கள் குறித்து தரக்குறைவாக ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததால் உடனடியாக அந்த பதிவை அவர் நீக்கி விட்டார். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி வெளியிட்ட கருத்துக்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரினார். மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன் என எஸ்.வி.சேகர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், எஸ்.வி.சேகர் தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு விட்டதாகவும், வேறு ஒருவரின் பதிவை படிக்காமல் ஃபார்வேடு செய்து விட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நோக்த்துடனோ, குற்ற எண்ணத்துடனோ பதிவை பகிரவில்லை என்றும், எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் எஸ்.வி.சேகர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். எஸ்.வி.சேகர் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவதில் காவல் துறை விசாரணை சரியாக இருப்பதுபோல் தெரியவில்லை என்று நீதிபதிகள் கூறினர். சாதாரண மனிதர்கள் மீதான வழக்குகளிலும் இப்படித்தான் விசாரணை நடைபெறுகிறதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு அரசு தரப்பு மழுப்பலான பதிலை கூறியதற்கு நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.