
கோவா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைக்க ஆளுநர் மிருதுளா சின்ஹா அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தொங்கு சட்டசபை
40 சட்டசபைதொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும், பாரதிய ஜனதா கட்சிக்கு 13 இடங்களும் கிடைத்தன. மற்ற கட்சிகளான மஹாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி(எம்.ஜி.பி.), கோவா முன்னணி கட்சி(ஜி.எப்.பி.), என்.சி.பி. ஆகிய கட்சிகள் மீதமுள்ள 10 இடங்களைக் கைப்பற்றின.
பா.ஜனதா தீவிரம்
கோவா மாநிலத்தில் தனிப் பெரும் கட்சியாக 17 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் இருந்தபோதிலும், சிறிய கட்சிகளான எம்.ஜி.பி., ஜி.எப்.பி., என்.சி.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறது. இன்று மாநில முதல்வராக முன்னாள் முதல்வரும், பாதுகாப்பு துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் பதவி ஏற்கிறார்.
அவசர மனு
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சந்திரகாந்த் கவலேகர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குதான் அதிகமான எம்.எல்.ஏ.க்கள்இருக்கிறார்கள். தனிப் பெரும் கட்சியாகவும் இருக்கிறது. ஆட்சி அமைக்க அழைத்தால், காங்கிரஸ் கட்சியைத் தான் ஆளுநர் அரசியமைப்பு சட்டப்படி அழைக்க வேண்டும்.
தீர்ப்புக்கு எதிரானது
ஆனால், 2-ம் இடத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் மிருதுளா சின்ஹா அழைத்தது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற நீதிபதி ராமேஷ்வர பண்டிட் தீரப்பில், மாநிலத்தில் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியைத்தான் ஆட்சி அமைக்க முதலில் வாய்ப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொங்கு சட்டசபை உருவாகும் சூழ்நிலையில், ஆளுநர் முதலில் தனிப்பெரும்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தான் வாய்ப்பு அளித்து அழைப்பு விடுக்க வேண்டும். ஆதலால், ஆளுநர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விசாரணை
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி கேகரிடம் தாக்கல் செய்யப்பட்டது. அவர் இந்த மனு மீது விசாரணை நடத்த சிறப்பு அமர்வு இன்று உருவாக்கப்பட்டு, விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஹோலி பண்டிகையையொட்டி நேற்று உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.