
ஆர்.கே நகர் தொகுதியில் திமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதற்கான நேர்காணல் அண்ணா அறிவாலையத்தில் இன்று நடைபெற்றது. இதுகுறித்த முடிவு நாளை அறிவிக்கப்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதவி வகித்த ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளதால் அந்த தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், திமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றுவந்தது. பின்னர், விருப்பமுள்ளவர்கள் 25,000 ரூபாய் கட்டணமாக செலுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அண்ணா அறிவாலையத்தில் கொடுக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் மார்ச் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நேர்காணல் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியை ஆலோசித்து நாளை இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் திமுக வெற்றி பெறும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.