
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ.உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று திமுக பொருளாரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
பரமாரிக்கப்படாத குளத்தை தூர் வாருவது முதல் சோர்ந்து போன கழக உடன்பிறப்புகளை தோளில் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது என அனைத்திலுமே செம ஸ்மார்ட்டாக சொல்லி அடித்து வருகிறார் மு.க.ஸ்டாலின்...
புலிக்குப் பிறந்தது பூனையாகி விடுமா! என்பதைப் போல இரவு சென்னையில், விடிந்தால் கரூரில், மாலை கோயம்புத்தூர் என ஓய்வறியாச் சூரியனைப் போல ஜொலித்து வருகிறார். தேவைப்படும் இடத்தில் சுழன்றும் கண்டிக்க வேண்டிய தருணத்தில் கனன்றும் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் தேவைகளை தனது அறிக்கைகளால் சுட்டிக் காட்ட என்றும் தவறியதில்லை...
நாடு முழுமைக்கும் இந்தியை திணிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ.உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று முதல் ஆளாக குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மத்தியில் உள்ள பா.ஜ., அரசு கண்ணை மூடிக்கொண்டு இந்தி திணிப்பை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நேரத்தில் தமிழை மாணவர்கள் கற்று கொள்ள வேண்டியது அவசியம்.
ஆனால், தமிழ் மொழி பற்றிய சிந்தனையை வருங்கால தலைமுறையிடம் முழுவதுமாக மறக்கடித்து விட வேண்டும் என திட்டமிட்டு செயல்படும் மத்திய அரசு போல் தமிழக அரசும் செயல்படுகிறது கவலையளிக்கிறது."
"சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையில் தமிழை கட்டாய பாடமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும்.
அரசு பள்ளிகளிலும் போதிய தமிழாசிரியர்களை நியமித்து தமிழ் மொழி கற்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும்" இவ்வாறு தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்