தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை முடியும் முன்பே முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது.
ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் (செப்டம்பர் 22) முடிவடைகிறது. அதிமுக கூட்டணியில் பாமக விலகிவிட்ட நிலையில், இடங்கள் பங்கீடு தொடர்பாக பாஜக பேசி வருகிறது. 25 சதவீத இடங்களை பாஜக கேட்பதாக செய்திகள் வெளியாகின. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக பொறுப்பாளர்களுடன் பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகத்திலும் வார்டு பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டணியில் அதிமுகவுக்கு எத்தனை சதவீத இடங்கள், பாஜகவுக்கு எத்தனை சதவீத இடங்கள் போன்றவை இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பேச்சுவார்த்தை முடியாத நிலையிலேயே நேற்று மாலைக்கு மேல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அதிமுக தலைமை கழகம் வெளியிடப்பட்டது. இது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் முதல் வேட்பாளர் பட்டியல் ஆகும். பேச்சுவார்த்தை முடிவதற்கு முன்பே அதிமுக தலைமை முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதால் பாஜக தரப்பு அதிர்ச்சியடைந்தது. இதனால், கூட்டணியில் குழப்பமா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்றாலும் சுமுகமாக பேச்சுவார்த்தை முடியும் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.