லஞ்ச லாவண்யத்தில் குளிக்கும் தமிழக அரசு: இரும்படி அடிக்கும் இல.கணேசன்...

First Published Nov 11, 2017, 3:40 PM IST
Highlights
ila ganesan comments against tamilnadu govt


சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடி, கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்தது  பற்றி அரசியல் ரீதியாக ஏகப்பட்ட யூகங்கள் சிறகு கட்டியிருக்கின்றன. அவற்றில் ஒன்று ‘பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி’. அதேபோல் இந்த சந்திப்பின் மூலம் தமிழகத்தில் காங்கிரஸை கூட்டணியிலிருந்து கழற்றிவிட தி.மு.க. முடிவு செய்துவிட்டது என்றும் ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது. 

இது பற்றி பேசியிருக்கும் பி.ஜே.பி.யின் மாநிலங்களவை உறுப்பினரான இல.கணேசன் “சில வருஷங்களுக்கு முன்னாடி நம்ம கிராமப்புறங்களில் ஒரு பழக்கம் இருந்துச்சு. ஏதாவது ஒரு பையனும், பொண்ணும் சும்மா சிரிச்சுப் பேசிட்டாலே கூட ‘லவ்வு’ன்னு முடிவு கட்டிடுவாங்க. அதே மாதிரிதான் இதுவும். ஒரு கட்சியின் தலைவர், உடல் நிலை சரியில்லாம இருக்கிற இன்னொரு தலைவரை பார்த்தாலே அதுக்கு பேர் கூட்டணியா?

அ.தி.மு.க.வின் பெயர் கெட்டுக் கிடப்பதால் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க மோடி முடிவெடுத்துவிட்டார் என்று சொல்வதும் சிரிப்பை தருகிறது. அ.தி.மு.க. தலைவர்கள் மீது மோடி என்றைக்கு நம்பிக்கை வைத்திருந்தார், அதை இப்போது இழக்க? ஒரு மாநில அரசுக்கு பிரதமர் கொடுக்கும் யதார்த்தமான மரியாதையை மோடி அவர்கள் தமிழக முதல்வர்களுக்கு தருகிறார் அவ்வளவே. ஜெ., இருந்தபோது அந்த கட்சியோடு இருந்த நட்பை இப்பவும் தொடர்கிறார் அவ்வளவே!

இந்த ஆட்சிக்குப் பின்னால் மோடி தான் இருக்கிறார், இயக்குகிறார் என்று சொன்னால் தமிழ்நாட்டின் எந்த அரசு அலுவலகத்திலும் லஞ்ச, லாவண்யம் இருக்கவே இருக்காது. குஜராத், ம.பி. போல் தமிழகமும் வளர்ந்திருக்கும். தமிழ்நாடு அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பார்த்தால் அதன் பின் மோடி இருக்கிறார் என்று துளியளவும் கருத முடியாது.” என்று நெத்தியடியாய் பேசியிருக்கிறார்.

இல வின் இந்த பேச்சு அ.தி.மு.க. அமைச்சர்களிடம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது என்கிறார்கள். 

இந்த ஆட்சியை மோடி இயக்கவில்லை என்று கூறிவிட்டு போவதைவிட்டு லஞ்ச லாவண்யம், இந்த ஆட்சியின் செயல்பாடு! என்றெல்லாம் எங்களை ஏகத்துக்கும் எடுத்தெறிந்து குத்தி, குதறி பேசியிருப்பதை கடுமையாய் கண்டிக்கிறோம் என்று காண்டாகிறார்களாம். 

கடுப்பு வரத்தான் செய்யும்! பொறுத்துக்கணும் பாஸ்,பொறுத்துக்கணும்!

click me!