மத்திய அரசுக்கு விரோதமான அரசு தமிழகத்தில் அமைந்தால் அவ்ளோதான்... ஹெச். ராஜா வார்னிங்..!

By Asianet TamilFirst Published Feb 27, 2021, 9:07 PM IST
Highlights

கேரளாவை போல தமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி வந்தால் மத்திய அரசுத் திட்டங்களை முடக்கிவிடுவார்கள் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்று பேசினார். “மத்தியில் உள்ள அரசுக்கு விரோதமான அரசு மாநிலத்தில் அமைந்தால், மத்திய அரசின் திட்டங்களை முடக்கிவிடுவார்கள். பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் செயல்படுத்தவில்லை. அதேபோல் தமிழகத்திலும் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி வந்தால் மத்திய அரசுத் திட்டங்களை முடக்கிவிடுவார்கள்.
பெண்களுக்கு புற்றுநோய், நுரையீரல் போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்கவே மத்திய அரசு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கி வருகிறது. இதுவரை 9 கோடி பேருக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பெண்கள், டீக்கடைகாரர்களுக்குக்கூட பாதுகாப்பு இருக்காது என்பது மக்கள் அறிவார்கள். தமிழகத்தில் மூன்றில் 2 பங்கு பெருபான்மையோடு அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.

 
பல்லாயிரக்கணக்கான திமுகவினர் பாஜகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். எங்களுக்கு மரியாதை கொடுத்தால் போதும் என்று பாஜகவுக்கு வருகிறார்கள். ஏனென்றால், திமுக கட்சி கருணாநிதி குடும்பத்திடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. திமுகவில் யார் என்ன பேச வேண்டும், யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதைக்கூட பிரஷாந்த் கிஷோர்தான் முடிவு செய்கிறார். இதனால் திமுக தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

click me!