ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி பெற்றால், தலைவர் கருணாநிதியே நேரில் வந்து நன்றி சொல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில், 19 ஆம் தேதி அன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தை வேகப்படுத்தி உள்ளனர். அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் மருதுகணேஷ், டிடிவி தினகரன் சார்பாக தீவிர பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.
பணப்பட்டுவாடா காரணமாக கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த முறையும் தேர்தல் நிறுத்தப்படக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் கவனமாக உள்ளது. ஆனாலும், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக அரசியல் கட்சியினரும் சுயேட்சை வேட்பாளர்களும் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் பணம் வழங்கியவர்களை, காவல்துறையிடம் பிடித்தும் ஒப்படைத்துள்ளனர்.
திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில், மருதுகணேஷை ஆதரித்து, வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
கடந்த ஒரு வருட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, தற்போது உடல் நலம் தேறி வருவதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி அழைத்து வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று
முன்தினம் இரவு அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி அழைத்து வரப்பட்டார். அண்ணா அறிவாலயம் வந்த கருணாநிதி, வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக வேட்பாளர் மருதுகணேஷை வெற்றி பெற செய்தால், திமுக தலைவர் கருணாநிதியே வந்து நன்றி சொல்வார் என்றும் கூறப்படுகிறது. திமுகவின் இந்த தேர்தல் யுக்தி பலன் கொடுக்குமா?