
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு தண்டனை கொடுப்பேன் என்று சீமான் பேசியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது:
தமிழ்நாட்டில் வாழும் உரிமை எவருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு. இது தான் எங்கள் முதன்மை தத்துவமாகும். தமிழ்மொழி 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னது என அமெரிக்க மொழியியல் ஆய்வு அறிஞர் அலெக்ஸ் கூறியுள்ளார்.
மேலும் மொழி ஞாயிறு தேவ நேயபாவாணர் தமிழ் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னது என கூறுகிறார். உலகில் எல்லோரும் பேசிய மொழி தமிழ் என ஆய்வில் கூறுகிறார்.
தமது மதத்தை இங்கு பரப்ப வந்த கால்டுவெல் போப் ஆதியில் காடுகளில் வாழ்ந்து பிறகு நகரங்களை நோக்கி நகர தொடங்கியபோது அவர்கள் பேசிய மொழிகளில் எழுத்து வடிவமும் இன்று வரை தமிழில் இருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு தமிழ் இனம் அடிமைப்பட்டு, அல்லல்பட்டு தன் இனப்பெருமை தெரியாது தாழ்ந்து போய் உள்ளது.
நம் நாட்டில் இன்னும் எத்தனையோ பேர் இரவு உணவின்றி பட்டினியால் தினம் தினம் செத்து மடிகிறார்கள். உணவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளோர் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் நமது பிரதமர் மோடியோ அவர்களுக்கு உணவளிப்பதை விட்டு மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று சட்டம் இயற்றுகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது அதன் பின் மாடுகளை விற்க தடை போட்டால் விவசாயி எப்படி பிழைப்பான்? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு தண்டனை கொடுப்பேன். மக்கள் தனி மனித அபிமானங்கள், தனி மனித புகழ்ச்சியை விட்டு வர வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.