தீயைத் தாண்டி வந்திருக்கிறேன். இன்னும் கடக்க நெருப்பாறுகள் உண்டு. உபி க்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின் ..

By Ezhilarasan BabuFirst Published Aug 5, 2021, 11:13 AM IST
Highlights

அவர் காட்டிய பாதை -அவர் அளித்த பயிற்சி - அதனால் அமைந்திருப்பதும் அவரது ஆட்சி என்பதை நெஞ்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டுதான் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ஆகிய நான் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றேன்.

சட்டமன்றத்தில் படமாகத் தோன்றிய நம் தலைவரின் நினைவை வீட்டில் போற்றுவோம் எனவும், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் என முதல்வரும் திமக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு:- 

ஒவ்வொரு உடன்பிறப்பின் இதயமும் தகர்ந்தது போன்ற உணர்வுடன் கண்ணீர் பெருக்கெடுத்த நாள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற - வைர நெஞ்சம் கொண்ட தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இயற்கை சதிசெய்து நம்மிடமிருந்து பிரித்த - பறித்த நாள். உடலால் அவர் பிரிந்தாலும் உடன்பிறப்புகள் மற்றும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இயற்கையின் கரங்கள் கொய்து சென்ற நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்கு இது மூன்றாம் ஆண்டு நினைவேந்தல். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் எல்லா நாளிலும் - அதன் ஒவ்வொரு நொடியிலும் அவர் நினைவின்றி நம் இயக்கமில்லை. தமிழே மூச்சாக - தமிழர் நலமே வாழ்வாகக் கொண்டு, 80 ஆண்டுகளைக் கடந்த  பொதுவாழ்வு கண்டு, 94 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து, தமிழ்நாட்டை வளம் பெறச் செய்து,  இந்திய அரசியல் வானில் ஒளிவீசும் உதயசூரியனாகத் திகழ்ந்த மகத்தான தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

நாம் மட்டும் அவரைப் போற்றவில்லை; நாடு போற்றுகிறது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், தமிழ்நாடுச் சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்து, அவரது பெருமைகளை எடுத்துரைத்ததைக் கண்டோம். மகத்தான சிறப்புமிக்க நம் தலைவரின் திருவுருவப்படத்தைச் சட்டமன்றத்தில் திறந்து வைப்பதற்கு, அவர் மறைந்து மூன்றாண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இந்திய அரசியல் தலைவர்களின் முன்மாதிரியான‘ரோல் மாடல்’தலைவருக்கு,  தி.மு.கழக அரசு அமைந்த பிறகுதான் சட்டமன்ற மண்டபத்தில் திருவுருவப் படம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. அதனால்தான் அந்த விழாவில், உங்களில் ஒருவனான நான் உரையாற்றும்போது, “இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் அவர்கள், தமிழன்னையின் தலைமகனான கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன். கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்!” எனக் குறிப்பிட்டேன். அந்த விழாவின் சிறப்பினை நினைக்கையில், உங்களில் ஒருவனாக - கலைஞரின் உடன்பிறப்பாக ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் ஆட்சி நிர்வாகத்தினைப் பயில்கிறேன்.

“தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டியிருக்கிறேன்” என்று ‘பராசக்தி’ திரைப்படத்தில் தலைவர் கலைஞர் எழுதியிருப்பார். அவரது ஓய்விடத்தில் சூளுரைத்தபடி, ஆறாவது முறையாக ஆட்சியமைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தல் களத்தில் தென்றலைத் தீண்டவில்லை. தீயைத் தாண்டி வந்திருக்கிறது. இன்னும் கடக்க வேண்டிய நெருப்பாறுகள் உண்டு. அதனைக் கடந்து நிற்கும் வலிமையும் இந்த இயக்கத்திற்கு உண்டு. அதன் தலைமைப் பொறுப்பைச் சுமந்திருக்கும் என்னை வழிநடத்தும் பேராற்றல் முத்தமிழறிஞர் கலைஞர் எனும் வரலாற்று நாயகருக்குரியது.  அதனால்தான், மக்களின் பேராதரவுடன் தனிப்பெரும்பான்மைமிக்க ஆட்சியினை அமைத்திருக்கிறோம். உயிர்நிகர் தலைவர் கலைஞர் நம்மிடையே உலவவில்லை என்றாலும், உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் அவர் நமக்கு ஊட்டிய உணர்வு நம் குருதியோட்டத்தில் கொள்கையோட்டமாக இருக்கிறது. 

அவர் காட்டிய பாதை -அவர் அளித்த பயிற்சி - அதனால் அமைந்திருப்பதும் அவரது ஆட்சி என்பதை நெஞ்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டுதான் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ஆகிய நான் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றேன்.‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’ எனத் தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்தளித்த நெறியின்படி, மாநிலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் - பேரிடர் சூழலிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அரணாக இருந்து, தி.மு.கழகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தலையாய கடமையாகக் கொண்டு செயலாற்றுகிறேன். நெஞ்சில் நிறைந்துள்ள தலைவர் கலைஞர் அவர்களிடம் அதற்கான வழியினைக் கற்றிருக்கிறேன். அவரிடமிருந்து அதற்கான வலிமையையும் பெற்றிருக்கிறேன்.  உடன்பிறப்புகளாம் உங்களின் துணையுடனும் - தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடனும் தலைவர் கலைஞர் வழியில் கழக அரசின் பயணம் தொடரும் என்பதை அவரது மூன்றாம் ஆண்டு புகழ்வணக்க நேரத்தில் உறுதிமொழிகிறேன்.

உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்பே இந்தப் பயணத்திற்கு வலு சேர்க்கும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குப் புகழ் சேர்க்கும். கொரோனா கால நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு - அவற்றை முறையாகக் கடைப்பிடித்து - ஆகஸ்ட் 7 அன்று அவரவர் இல்லத்தின் வாசலில் தலைவர் கலைஞர் அவர்களின் படத்தினை வைத்து – மாலையிட்டு - மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்திட வேண்டுகிறேன்.  பெரு விழாக்கள் வேண்டாம். அலங்காரங்கள் - ஒலிபெருக்கிகளைத் தவிர்த்திடுவீர். நம் நெஞ்சங்களிலும் நினைவுகளிலும் நிரந்தரமாக இருந்து, நாட்டை வழிநடத்தும் முத்தமிழறிஞருக்கு வீடுகள்தோறும் மரியாதை செலுத்திடுவோம். அவர் வகுத்த பாதையில் பயணித்து தமிழ்நாட்டை மாண்புறச் செய்திடுவோம். என தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!