எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது,என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால்,நான் மனிதனே இல்லை..டாக்டர்.அம்பேத்கர் பொன்மொழியை மேற்கோள்காட்டி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார் முக.அழகிரி.
T.Balamurukan
எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது,என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால்,நான் மனிதனே இல்லை..டாக்டர்.அம்பேத்கர் பொன்மொழியை மேற்கோள்காட்டி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார் முக.அழகிரி.
கடந்த திமுக ஆட்சியில் தென்மாவட்டம் முழுவதும் தன்னுடையை கட்டுப்பாட்டில் இரும்பு கோட்டையாக வைத்திருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி.திமுக ஆட்சி மாறியதும்,கட்சிக்குள் காட்சிகள் மாறியது. அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான இசக்கிமுத்து,மன்னன்,முபாரக்மந்திரி,கோபிநாதன் என பலரும் கட்சியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.அதன் பிறகு பல முறை கலைஞரிடம் தன்னையும் தன்னுடைய ஆதரவாளர்களையும் கட்சியில் சேர்க்க பலமுறை முயற்சி செய்தார் அழகிரி. அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் இதோடு ஒழிந்து போகட்டும் மீண்டும் கட்சிக்குள் சேர்த்தால் மீண்டும் பல குழப்பத்தை ஏற்படுத்துவார் அழகிரி என்று உறுதியாக இருந்தார் அழகிரி.
மதுரை அழகிரி கோட்டை என்கிற இமேஜை உடைக்க திட்டமிட்டார் ஸ்டாலின். அதேபோல் மதுரை மாநகரில் மா.செ கோ.தளபதி,முன்னாள் மா.செ வேலுச்சாமி, இளைஞர் அணி ஜெயராமன் ஆகியோர் கோட்டையை விட்டு வெளியே வந்து ஸ்டாலினுக்கு போஸ்டர் அடித்து வரவேற்று பட்டையை கிளப்பினார்கள்.அதன் பிறகு நடந்த எம்.பி தேர்தலில், திமுக தென்மாவட்டத்தில் பலத்த அடிவாங்கும் என்று தேர்தல் முடிவை முன்கூட்டியே ஆரூடம் சொன்னார் அழகிரி.அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தென்மாவட்டத்தில் பல எம்.எல்.ஏக்களை பெற்றது.நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் வென்றது.இப்படியாக தென்மாவட்டத்தில் அழகிரி இமேஜை காலி செய்தார் ஸ்டாலின்.
திமுக ஒன்னும் சங்கரமடம் இல்லை என்று உச்சகட்டத்தில் கொந்தளித்தார் அழகிரி. கலைஞர் உடல்நலமில்லாமல் போனபிறகு திமுகவிற்கு அடுத்த தலைவர் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அதன் பிறகு திமுக தலைவர் ஆனார் ஸ்டாலின். இளைஞர் அணிச் செயலாளராக தன்னுடைய மகன் துரைதயாநிதிக்கு கொடுங்கள் என்றும் கேட்டார் அழகிரி.அதுக்கு கதவு அடைக்கப்பட்டது ஸ்டாலின் தரப்பில் இருந்து...
இதற்கிடையில், ஸ்டாலின் மகனுக்கு இளைஞர் அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.இது அழகிரிக்கு கூடுதலாக கடுப்பு ஏற்றியது.
இந்தநிலையில்,டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள், சித்திரை வருடபிறப்பு நாளை முன்னிட்டு சத்தமில்லாமல் இருந்த அழகிரி வெளியில் வந்து ,தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும்,அதை புரிந்துகொள்ளாதவன் மனிதனே இல்லை என்றும் பதிவு செய்திருக்கிறார். அந்த வாசகம் அவருடைய ஆதரவாளர்களிடையை கூடுதலாக அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.