16 லட்சம் பிரதிநிதியை ஒன்றும் சொல்லக்கூடாது! 130 கோடி பேரின் பிரதிநிதியை கல்லால் அடிக்கலாமா? சிக்கலில் ஜோதிமணி

By Manikandan S R SFirst Published May 20, 2020, 9:27 AM IST
Highlights

நான் 16 லட்சம் வாக்காளர்களின் பிரதிநிதி நான் கேள்வி கேட்பேன்  என்று பேசும் நீங்கள் நாட்டின் பிரதமர் 130 கோடிபேர்களின் பிரதிநிதி என்பதை மறந்து விட்டீர்கள்.. அவரை நீங்கள் கல்லால் அடிப்பதாக பேசியது எந்த விதத்தில் நாகரீகம்?

அண்மையில் பிஜேபி-மோடியை மக்கள் இன்னும் கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடுமையாக விமர்சித்து பேசினார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜோதிமணி மூன்றாம் தரப் பெண் என பாஜகவின் கரு. நாகராஜன் தொலைக்காட்சி விவாதத்தில் பேசியது அரசியல் அரங்கில் சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது. கரு.நாகராஜன் பேச்சிற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே பிரதமரை கல்லால் அடிக்க வேண்டும் என ஜோதிமணி கூறியதற்கு கரு. நாகராஜனின் பதில் சரியானது தான் என அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான ஒரு பதிவில், பிரதமரை மக்கள் கல்லால் அடிக்க வேண்டும் என்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசுகிறார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.‌ ஆனால் அதை விட்டு விட்டு "தரக்குறைவான பெண்மணி" என கரு நாகராஜன் எதிர்வினையாற்றியதை பிடித்துக்கொண்டு பிரச்சினையை திசை திருப்பி வருகிறது காங்கிரஸ் திமுக கட்சிகள்.

ஜோதிமணி அவர்களே...நீங்கள் எங்கே போய் வேண்டுமானாலும் போய் கதறுங்கள்.. பாரதபிரதமரை கல்லால் அடிப்பேன் என்று பேசிவிட்டு பின் விவாதத்தில் இருந்து ஓடிவந்து இப்போது நீலி கண்ணீர் வடிப்பது.. நடிகர் திலகத்திற்கே சவால் விடுவதைபோல...

நான் 16 லட்சம் வாக்காளர்களின் பிரதிநிதி நான் கேள்வி கேட்பேன்  என்று பேசும் நீங்கள் நாட்டின் பிரதமர் 130 கோடிபேர்களின் பிரதிநிதி என்பதை மறந்து விட்டீர்கள்.. அவரை நீங்கள் கல்லால் அடிப்பதாக பேசியது எந்த விதத்தில் நாகரீகம்? டெல்லியில் பாராளுமன்ற கூட்டதொடரில் இதுவரை உங்கள் தொகுதி மக்களுக்காக குரல் கொடுத்து என்ன திட்டத்தை கொண்டுவந்துள்ளீர்கள்? உங்களுக்கு தெரிந்தது விவாதங்களில் நாகரீகம் இல்லாமல் அடுத்தவர் பேசும்போது குறுக்கே பேசி அவரின் கருத்தை மக்களிடம் சென்றுசேராமல் செய்வதுதான்...

முதலில் பிரதமரை கல்லால் அடிப்பதைபற்றி நீங்கள் பேசியதற்குதான் கருநாகராஜன் எதிர்வினையாற்றினார். கருநாகராஜன் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர். இனி இப்படிதான்...பிரதமரை பற்றி யார் எங்கு பேசினாலும் அதற்கு அங்கேயே கடுமையான எதிர்வினை கொடுக்கப்பட வேண்டும். இது தொடக்கம்தான்.. இனி பிரதமரை இழிவுபடுத்திவிட்டு இப்படி நீலிகண்ணீர் வடித்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். ஒருவேளை பெண்களை தப்பாக பேசினார் என இந்த விஷயத்தை திசை திருப்பும் வகையில் கரு நாகராஜன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றால் அதிமுகவுடனான உறவை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!