
திருச்சி மாநகராட்சி முன்னாள் அதிமுக மேயர் எம்.எஸ்.ஆர்.ஜெயா திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் 2011-16 வரை அதிமுகவின் முதல் பெண் மேயராக எம்.எஸ்.ஆர்.ஜெயா பதவி வகித்தவர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரனின் மனைவியான இவர் திருச்சி பீமநகர் நியூராஜா காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை ஜெயாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடலுக்கு அதிமுக திருச்சி மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி, வெல்லமண்டி என்.நடராஜன், உட்பட அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இவரது திடீர் மரணம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த நிலையில் ஜெயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெருரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.