வரலாற்று பிழைகளை திட்டமிடுவது, வரலாற்று உண்மைகளை சிதைப்பதே திமுகவின் வேலை.. எகிறி அடிக்கும் அண்ணாமலை..!

Published : Jan 28, 2022, 05:44 AM IST
வரலாற்று பிழைகளை திட்டமிடுவது, வரலாற்று உண்மைகளை சிதைப்பதே திமுகவின் வேலை.. எகிறி அடிக்கும் அண்ணாமலை..!

சுருக்கம்

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை உள்ள நடைமுறை, என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் அனைத்து மாநிலங்களும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ள தங்கள் மாதிரி ஊர்திகளை உடன் விண்ணப்பிக்கும்.  பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளில் சிறப்பானவற்றை, பாதுகாப்புத்துறை குழு தேர்ந்தெடுத்து ஊர்வலத்தில் பங்கு பெற செய்யும். 

வரலாற்றுப் பிழைகளை திட்டமிட்டு திமுக அரசு செய்து வருகிறது. வரலாற்று உண்மைகளை காலம் காலமாக சிதைத்து வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘ஒரே நாடு’ என்ற கட்சி பத்திரிகையில் அண்ணாமலை கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், “குடியரசுத் தின அணிவகுப்பில் இடம் பெறும் ஊர்தி அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியானது. இதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால், தமிழக அரசின் குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றபோது, வாகனங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்ற குட்டு வெளிப்பட்டு விட்டது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்கூட குடியரசு தின பேரணியில் தமிழக ஊர்திகள் இடம்பெறாது இருந்தது உண்டு. நமக்கு தமிழக ஊர்தி இடம் பெறாததற்கான முக்கிய காரணம்  'தமிழக அரசே' என்பது அதிர்ச்சியைத் தருகிறது.

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை உள்ள நடைமுறை, என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் அனைத்து மாநிலங்களும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ள தங்கள் மாதிரி ஊர்திகளை உடன் விண்ணப்பிக்கும்.  பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளில் சிறப்பானவற்றை, பாதுகாப்புத்துறை குழு தேர்ந்தெடுத்து ஊர்வலத்தில் பங்கு பெற செய்யும்.  இக்குழுவானது முதலில் வடிவமைப்பை ஆய்வு செய்து அதில் எந்த மாநிலங்கள் சிறப்பான மாதிரியை வடிவமைத்து முன்வைத்ததோ, அந்த மாநிலங்களின் ஊர்தி அந்த வருட அணிவகுப்பில்  இடம் பெறத் தேர்வாகும் என்பதே நடைமுறை.

அதனடிப்படையில் இந்த வருடம் தமிழகம் சரியான முறையில் நம் மாநில ஊர்திகளை காட்சிப்படுத்த தவறிவிட்டது. தமிழக அரசின் அதிகாரிகள்  கேட்கப்பட்ட திருத்தங்களை அனுப்பி வைக்காமல், திருத்தப்பட்ட மாதிரிக்கு ஒப்புதல் பெறாமல், காலத்தையெல்லாம் கடத்திவிட்டு, தங்கள் தவறுகளை மறைக்க, மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்று மத்திய அரசின் மீது பழி சூட்டினர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்க கடிதம் கொடுத்தும், நானும் ஒரு காணொளியில் விளக்கிக் கூறிய பிறகும், தமிழக முதல்வர் நடைமுறை தெரியாமல் வழக்கம்போல் மத்திய அரசு வஞ்சித்து விட்டது என்று மீண்டும் மீண்டும் மலிவு அரசியலை செய்வது அழகல்ல.

நான் முன்னர் என் கடிதத்தில் சொன்னதுபோல வரலாற்றுப் பிழைகளை திட்டமிட்டு திமுக அரசு செய்து வருகிறது. வரலாற்று உண்மைகளை காலம் காலமாக சிதைத்து வருகிறது. இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனையில் புனையப்படும் வரலாற்றுப் பிழைகளை படங்களாகவும் படங்களாகவும் செய்ய முயற்சிக்கும் திமுகவை தமிழர்கள் சார்பாக  நாம் அனைவரும் ஒரே குரலில் கண்டனங்களைத் தெரிவிப்போம்.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!