
ஹாலிவுட்டின் பரபரப்பான ஆக்ஷன் மூவி முடிந்ததும் இறுதியில் அதன் மேக்கிங் டீமின் பெயர்களைப் போடுவார்கள். அதன் கட்டக்கடைசியில் இயக்குநரின் பெயர் அசத்தலாக வந்து நிற்கும்.
தமிழகத்தில் சசி வகையறாவின் சொத்துக்களை ஐ.டி. துறை வேட்டையாடி விளையாடிய ஆறு நாள் பரபர ஆக்ஷன் மூவி இதோ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த சூழலில் இந்த பரபரப்பை இயக்கியவர், இதன் கிரியேடீவ் ஹெட்டாக இருந்தவரின் பெயரை தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று டெல்லி பக்கம் துலாவினால் வந்து விழுகிறது ஹஷ்முக் ஆதியா எனும் பெயர்.
யார் இவர்? இவர்தான் நம் தேசத்தின் நிதித்துறை செயலாளர். நமோவின் சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்தவர். மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது அவரது இணைச்செயலாளராக இருந்தவர்.
நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு நெருக்கமான நிதித்துறை செயலாளர் லாவாசா ஓய்வு பெற்ற பிறகு மோடியே விரல் நீட்டி இவரை அந்த பதவிக்கு தேர்ந்தெடுத்தாராம். இவரது நடவடிக்கைகள் அருண் ஜெட்லிக்கே புதிராகவும், வியப்பாகவும் இருக்குமாம்.
ஹஷ்முக் ஆதியா மத்திய நிதித்துறை செயலாளரான பிறகு பொருளாதார சீர்திருத்த விஷயத்தில் பிரம்மாண்டமான மாற்றங்களை எதிர்பார்த்து சில அஸைண்மெண்டுகளை கொடுத்தார் மோடி. அதன் விளைவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. ஆகியவை. இவற்றின் சூத்ரதாரி ஆதியாதான். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் தேசமெங்கிலுமுள்ள பினாமி கம்பெனிகளின் நடவடிக்கையை நிதித்துறையின் ஸ்பெஷல் இண்டலிஜன்ஸ் டீம் கண்காணித்திருக்கிறது. அப்போதுதான் தமிழகத்தை அடிப்படையாக கொண்ட பல பினாமி கம்பெனிகள் பற்றிய தரவுகள் கிடைத்ததாம். அதன் நதிமூலத்தை தேடி பிடித்தபோது அது சசி வகையறாவிடம் போய் நின்றிருக்கிறது.
ஆக அப்போதே சசி டீமுக்கு எதிராக ஐ.டி. ரெய்டுக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்கிறது. ஆனால் ஜெயலலிதா அப்பல்லோவில் கிரிட்டிகல் நிலையிலிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் அது மக்களிடையே பெரும் கலவர சூழலை உருவாக்கும் என்று நினைத்து அடக்கி வாசித்திருக்கின்றனர். அதே நேரத்தில் ஜெ இப்படி இருக்கும் சூழலில் நிச்சயம் தங்களின் புலனாய்வை ஸ்மெல் செய்யவோ, தங்களை காப்பாற்றிக் கொள்ளவோ சசி டீம் நிச்சயம் செய்யாது என்று நம்பினார் ஆதியா. அது அப்படியே நடந்தது.
ஆனால் ஜெ., மரணிக்க இங்கே கட்சி வேறு விதமாய் போக துவங்க, சசி சிறை செல்ல என்று ஏகப்பட்ட விஷயங்கள். எல்லாமே ஒரு நேர்கோட்டுக்குள் வரட்டும் என்று காத்திருந்தார் ஆதியா. இப்போது சூழல் ஒரு அடைப்புக்குள் வந்திருக்கும் நிலையில் சட்டென்று சசி குடும்பத்தார் மீது பாய்ந்திருக்கிறது ஐ.டி.
ஆதியாவின் ஒவ்வொரு மூவ்வுமே மோடிக்கு தெரியுமென்றும், அதில் பல விஷயங்கள் அருண் ஜெட்லிக்கே தெரியாது என்றும் கிசுகிசுக்கின்றன டெல்லி முக்கிய தலைகள்.
சர்தான்!